வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Mahalakshmi
Last Updated : வெள்ளி, 3 ஜூலை 2015 (12:37 IST)

குரு பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

கற்பூர புத்தி உள்ளவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ம் வீட்டில் அமர்ந்து உங்களை நாலாபுறமும் பந்தாடியதுடன், எந்த சுகங்களையும் அனுபவிக்க முடியாமல் தடுத்து, தாயாருடன் கசப்புணர்வுகளையும், அவருக்கு மருத்துவச் செலவுகளையும் ஏற்படுத்தி வந்த குருபகவான் 05.07.2015 முதல் 01.08.2016 வரை உங்கள் ராசிக்கு பூர்வ புண்ய ஸ்தானமான 5-ம் வீட்டில் அமர்ந்து அள்ளிக் கொடுப்பதுடன், உங்களுடைய வாழ்க்கை தரத்தையும் உயர்த்தப் போகிறார். வீட்டில் சந்தோஷம் குடிகொள்ளும். 
 
கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். இருவரும் மனம் விட்டு பேசி சில முக்கிய முடிவுகளெல்லாம் எடுப்பீர்கள். எவ்வளவோ வசதி வாய்ப்புகள் இருந்தும் பல மருந்துவர்களிடம் ஆலோசித்து மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டும் வீட்டில் துள்ளி விளையாட ஒரு பிள்ளை இல்லையே என்று ஏங்கித் தவித்தீர்களே! இப்போது அழகு, அறிவுள்ள குழந்தைப் பிறக்கும். பூர்வீக சொத்தில் உங்களுக்கு சேர வேண்டிய பங்கு கைக்கு வரும். பாகப்பிரிவினை பிரச்னை சுமூகமாகும். தாயாருக்கு இருந்து வந்த நோய் குணமடையும். இனி அவருக்கு ஆரோக்யம் கூடும். முதுகு, மூட்டு வலி, தலைச்சுற்றல் நீங்கும். சர்க்கரை நோயின் தாக்கம் குறையும். தாயாருடனான மோதல்கள் விலகும். நீங்கள் சொல்லாததையும் சொன்னதாக நினைத்துக் கொண்டு மனக்கசப்பால் ஒதுங்கியிருந்த நண்பர்கள், உறவினர்கள் இனி விரும்பி வந்து பேசத் தொடங்குவார்கள்.

நீண்ட நாளாக புதுபிக்கப்படாமலிருந்த குலதெய்வ கோவிலை சொந்த செலவில் புதுப்பிப்பதுடன், உங்களின் நேர்த்திக் கடனையும் செலுத்துவீர்கள். உங்கள் மகளுக்கு வரன் தேடி அலைந்து அலுத்துப் போனீர்களே! நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும். திருமணத்தை சீரும், சிறப்புமாக நடத்துவீர்கள். மகனின் உயர்கல்வி, உத்யோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகளும் சாதகமாக முடிவடையும். அவருக்கும் நல்ல வாழ்க்கைத்துணை அமையும். பிள்ளைகள் இனி குடும்ப சூழ்நிலையறிந்து பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். அவர்களால் சமூகத்தில் அந்தஸ்து ஒருபடி உயரும். மனதில் தொக்கி நிற்கும் தாழ்வு எண்ணங்களை தூக்கி எறிவீர்கள். 
 
குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்கள் ராசியை பார்ப்பதால் எப்போது பார்த்தாலும் உங்கள் முகத்தில் ஏதோ ஒரு சோகம் இருந்துக் கொண்டேயிருந்ததே! இனி அழகு, இளமைக் கூடும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தையெல்லாம் ஒருவழியாக தந்து முடிப்பீர்கள். அடகிலிருந்த வீட்டு பத்திரங்கள், நகைகளையெல்லாம் மீட்பீர்கள். வேற்றுமதத்தவர்கள், மாற்று மொழியினர்கள், அண்டை மாநிலத்தவர்களால் உதவிகள் உண்டு. வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். புது பதவிகள், பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். சோர்வு, சலிப்பு நீங்கி உற்சாகத்துடன் வளம் வருவீர்கள். 
 
குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்களின் 9-ம் வீட்டை பார்ப்பதால் இழுபறியாக இருந்து வந்த வேலைகளெல்லாம் முடிவடையும். புதிய யோசனைகள் உதயமாகும். தொழிலதிபர்கள், அறிஞர்களின் நட்பு கிடைக்கும். தந்தைவழியில் ஆதரவுப் பெருகும். தந்தையாரின் ஆரோக்யம் சீராகும். அவர் உங்கள் முயற்சிகளுக்கு பக்கபலமாக இருப்பார். பிதுர்வழி சொத்தை கூடுதல் செலவு செய்து சீர்த்திருத்தம் செய்வீர்கள். வீண் சண்டைகள், விவாதங்களிலிருந்து ஒதுங்குவீர்கள். நீண்ட நாளாக போக வேண்டுமென்று நினைத்திருந்த அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். 
 
உங்களின் லாப வீடான 11-ம் வீட்டை குரு தனது 7-ம் பார்வையால் பார்ப்பதால் உங்களுடைய தனித்திறமைகளை அதிகரித்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். மூத்த சகோதர, சகோதரிகளுடன் இருந்து வந்த பிணக்குகள் நீங்கும். ஷேர் மூலமாக பணம் வரும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். அரைக்குறையாக நின்ற கட்டிட வேலைகளைத் தொடங்குவீர்கள். வங்கி லோன் கிடைக்கும். டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் புதிதாக வாங்குவீர்கள். வழக்கில் இருந்த பின்னடைவு நீங்கி சாதகமான தீர்ப்பு வரும். சங்கம், இயக்கம் இவற்றில் புது பதவிகள் தேடி வரும்.    

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
05.07.2015 முதல் 06.09.2015 வரை குருபகவான் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். சுபச் செலவுகளும் அதிகமாகும். சில நாட்கள் தூக்கம் குறையும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். புது வீடு கட்டி குடிப் புகுவீர்கள். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீடு, மனை வாங்குவீர்கள். ஆனால் மகம் நட்சத்திரக்காரர்கள் மேற்கண்ட நாட்களில் ஆரோக்யத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அசதி, சோர்வு, செரிமானக் கோளாறு, யூரினரி இன்பெக்ஷன் வந்து நீங்கும். தனிமையில் அமர்வதை தவிர்க்கப்பாருங்கள் எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள்.    
 
07.09.2015 முதல் 16.11.2015 வரை மற்றும் 20.05.2016 முதல் 09.07.2016 வரை உங்கள் தன-சப்தமாதிபதியான சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். பணவரவு உண்டு. இதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும்.

சிலர் உங்கள் ரசனைக் கேற்ப நல்ல காற்றோட்டம், குடி நீர் வசதி உள்ள வீட்டிற்கு மாறுவீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றி புதுசு வாங்குவீர்கள். ஆனால் பரணி நட்சத்திரக்காரர்கள் எதிலும் அவசரப்பட வேண்டாம். கொஞ்சம் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.   
 
17.11.2015 முதல் 20.12.2015 வரை மற்றும் 10.07.2016 முதல் 01.08.2016 வரை குருபகவான் உங்கள் பூர்வ புண்யாதிபதியான சூரியனின் நட்சத்திரமான உத்திரம் 1-ம் பாதம் சிம்ம ராசியில் செல்வதால் அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகள் படிப்பில் முன்னேறுவார்கள். என்றாலும் மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். பூர்வீக சொத்தில் உங்கள் ரசனைக் கேற்ப சில மாற்றங்கள் செய்வீர்கள்.    
 
21.12.2015 முதல் 19.01.2016 வரை உத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் செல்வதால் எதிர்ப்புகள் அதிகமாகும். வி.ஐ.பிகளுடன் பகைமை வந்து நீங்கும். உறவினர், நண்பர்கள் மத்தியில் உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகரிக்கும். சிறுசிறு விபத்துகள், சளித் தொந்தரவு, காய்ச்சல், கழுத்து வலி, நரம்புச் சுளுக்கு வந்து நீங்கும். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள்.

சேர்த்து வைத்த கௌரவத்திற்கு பங்கம் வந்துவிடுமோ என்ற அச்சமும் உங்களுக்குள் இருந்துக் கொண்டேயிருக்கும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயல்வார்கள். நெடுங்காலமாக நெருங்கிப் பழங்கியவர்கள் கூட உங்களை தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். ஒரே நேரத்தில் நான்கைந்து வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் அதிகமாகும். தங்க நகைகளை யாருக்கும் இரவல் தரவோ, வாங்வோ வேண்டாம். வங்கிக் காசோலையில் முன்னரே கையப்பமிட்டு வைக்க வேண்டாம்.   

குருபகவானின் வக்ர கால பயணம்: 
20.01.2016 முதல் 06.02.2016 வரை குருபகவான் உத்திரம் நட்சத்திரம் 2-ம் பாதம் கன்னி ராசியில் வக்ர கதியில் செல்வதால் எடுத்த வேலைகளை முடிக்காமல் ஓயமாட்டீர்கள். நண்பர்கள் வீட்டு விசேஷங்களையெல்லாம் நீங்களே செலவு செய்து முன்னின்று நடத்துவீர்கள். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். அவர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். என்றாலும் வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். முக்கிய கோப்புகளையெல்லாம் கவனமாக கையாளுங்கள்.        
 
07.02.2016 முதல் 07.03.2016 வரை உள்ள காலக்கட்டத்தில் உத்திரம் 1-ம் பாதம் சிம்ம ராசியில் குரு வக்ரமடைவதால் முடிவுகள் எடுப்பதில் தயக்கம், தடுமாற்றம் வந்து நீங்கும். பூர்வீக சொத்துப் பிரச்னை தலைத்தூக்கும். சுமூகமாக பேசி தீர்க்கப் பாருங்கள். அதற்காக வழக்கு, வியாஜ்யம் என்று நேரத்தை விணடித்துக் கொண்டிருக்காதீர்கள். தோல்விமனப்பான்மையால் மனஇறுக்கம் உண்டாகும். யாரை நம்புவது, நம்பாமல் இருப்பது போன்ற குழப்பம் உண்டாகும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளிடம் அதிக கண்டிப்பு காட்டவும் வேண்டாம், அதிக சுதந்திரம் தரவும் வேண்டாம். அவர்கள் போக்கிலேயே சென்று அவர்களை விட்டுப் பிடிப்பது நல்லது. அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். சின்ன சின்ன அபராத தொகை கட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகும்.      
 
08.03.2016 முதல் 19.05.2016 வரை பூரம் நட்சத்திரத்தில் குரு வக்ர கதியில் செல்வதால் பழுதாகிக் கிடந்த மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். என்றாலும் கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோப் பிரச்னையால் பிரிவுகள் வரக் கூடும். மனைவிக்கு வீண் டென்ஷன், நெஞ்சு வலி, முழங்கால் வலி வந்துப் போகும்.            

வியாபாரிகளே! உப்பு விற்க போய் மழை பெய்வதும், மாவு விற்கச் சென்றால் காற்றடிப்பதுமாக உங்கள் தொழிலை இயற்கைக் கூட சோதித்ததே! எதைச் செய்தாலும் நஷ்டங்கள் தானே மிஞ்சியது, இனி மாறுபட்ட அணுகுமுறையால் அவற்றை யெல்லாம் சரி செய்வீர்கள். புதிது புதிதாக வந்த போட்டியாளர்களுக்குக் கூட ஈடுகொடுக்க முடியாமல் திணறினீர்களே! இனி அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் வியாபார சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். கடையை விசாலமாக்குவீர்கள். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். விளம்பர யுக்திகளை கையாண்டு தேங்கிக் கிடந்த சரக்குகளையெல்லாம் விற்றுத் தீர்ப்பீர்கள்.

வேலையாட்களும் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்துக் கொண்டு இனி பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். உணவு, தங்கும் விடுதி, கமிஷன், பவர் ப்ராஜெக்ட், எண்டர்பிரைசஸ், துணி வகைகளால் லாபமடைவீர்கள். நண்பர்கள், உறவினர்களின் உதவியால் புதிய முதலீடுகள் செய்வீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள். நீண்ட காலமாக வராமலிருந்த பழைய பாக்கிகளும் வசூலாகும். பிரச்னை தந்த பங்குதாரரை மாற்றி விட்டு உங்களுடைய கருத்துகளுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களை பங்குதாரர்களாக சேர்த்துக் கொள்வீர்கள். வியாபாரிகள் சங்கத்தில் பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.     
 
உத்யோகஸ்தர்களே! நாலாப்புறமும் பந்தாடப்பட்டீர்களே! கடினமாக உழைத்தும் அவமானங்களையும், அவப்பெயர்களையும் சந்தித்தீர்களே! உங்களை விட வயதில், அனுபவத்தில் குறைவானவர்களுக்கெல்லாம் கை கட்டி பதில் சொல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டீர்களே! அதிகாரிகளையும் திருப்திபடுத்த முடியாமல் திணறினீர்களே! இனி அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களை குறைக் கூறிக் கொண்டிருந்தவர்களின் மனசு இனி மாறும். உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார். புது அதிகாரி உங்களுக்கு பக்கபலமாக இருப்பார். வேலைச்சுமையும் குறையும். சக ஊழியர்களுடனான பிரச்னைகளும் கட்டுப்பாட்டிற்குள் வரும். உங்கள் மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கு, வீண் பழிகளிலிருந்து விடுபடுவீர்கள். நீண்ட காலமாக எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் இனி தடையின்றி கிடைக்கும். 
 
கன்னிப் பெண்களே! காதல் வேறு, நட்பு வேறு என்பதைப் புரிந்துக் கொள்வீர்கள். போலிக் காதலை உண்மையென நினைத்து ஏமாந்தீர்களே! அந்த மன உளைச்சலால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து விடுபடுவீர்கள். உயர்கல்வியில் தோல்வியுற்ற பாடத்தில் வெற்றி பெறுவீர்கள். கல்யாணம் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறதே! என்று வருந்தினீர்களே! இனி உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வரன் அமைந்து திருமணம் சிறப்பாக முடியும். கல்வித் தகுதிக் கேற்ற நல்ல வேலையும் கிடைக்கும். தாயாருடனான மோதல்கள் விலகும்.  
 
மாணவ-மாணவிகளே! கடினமான பாடங்களிலும் அதிக மதிப்பெண் பெறுவீர்கள். கெட்ட நண்பர்களை ஒதுக்கித் தள்ளுங்கள். சக மாணவர்கள் மத்தியில் புகழடைவீர்கள். விளையாட்டு, கலை, கட்டுரைப் போட்டிகளில் கலந்துக் கொண்டு பரிசு, பாராட்டைப் பெறுவீர்கள். வகுப்பாசிரியர் உறுதுணையாக இருப்பார்.       
கலைத்துறையினரே! வெளியிடப்படாமல் இருந்த உங்களுக்கு படைப்புகள் ரிலீசாகும். மக்கள் மத்தியில் பிரபலமாவீர்கள். ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமாகும். 
 
பரிகாரம்:
தஞ்சாவூர் மாவட்டம் திருவைகாவூர் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீவளைக்கைநாயகி உடனுறை ஸ்ரீவில்வவனேசுவரரை பிரதோஷ நாளில் சென்று வணங்குங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.