வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 10 ஏப்ரல் 2015 (16:46 IST)

மன்மத வருட ராசிப் பலன்கள் - மேஷம்

அழுத்தமான கொள்கை பிடிப்புள்ளவர்களே! உங்கள் ராசிநாதன் செவ்வாய் பகவான் உங்கள் ராசியிலேயே ஆட்சிப் பெற்று அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த மன்மத ஆண்டு பிறப்பதால் உங்களுடைய ஆளுமைத் திறன் அதிகரிக்கும்.
 
வி.ஐ.பிகள் நண்பர்களாவார்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதி தொகை தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். உடன்பிறந்தவர்கள் வகையில் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும்.
 
உங்களின் தனாபதி சுக்ரனும் தனஸ்தானத்திலேயே ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் ஏமாந்த தொகையெல்லாம் கைக்கு வரும். வீடு கட்ட, வாங்க வங்கிக் கடன் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். கணவன்-மனைவிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியவர்களை இனம் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். மனைவிவழியில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். சமையலறை, படுக்கையறையை நவீனமாக்குவீர்கள்.
 
இந்த மன்மத வருடம் உங்களுக்கு 10-ம் ராசியில் பிறப்பதால் செயற்கரிய காரியங்களை செய்து முடித்துப் பாராட்டைப் பெறுவீர்கள். புது பதவிகள், பொறுப்புகள் தேடி வரும். நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று அப்பாயின்மென்ட் ஆர்டர் வராமல் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். 
 
இந்தாண்டு முழுக்க சனிபகவான் 8-ல் அமர்ந்து அஷ்டமத்துச் சனியாக தொடர்வதால் எல்லாம் இருந்தும் எதையோ ஒன்றை இழந்ததைப் போன்ற ஒருவித அச்சம் உங்களுக்குள் இருந்துக் கொண்டேயிருக்கும். பணம், காசு, வசதி இருந்தால் தான் எல்லோரும் மதிப்பார்கள், இல்லையென்றால் யாரும் உங்களை சீண்டுவதுக் கூட இல்லையென்றெல்லாம் அவ்வப்போது புலம்புவீர்கள்.
 
தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். சட்டத்திற்கு எதிராக செயல்படுபவர்களுடன் எந்த நட்பும் வேண்டாம். மற்றவர்களுக்காக சாட்சி கையப்பமிட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவது நல்லது. இவர் சொல்கிறார், அவர் சொல்கிறார் என்று எடுத்தோம், கவிழ்த்தோம் என்றெல்லாம் முடிவுகள் எடுக்க வேண்டாம்.
 
நிதானமாக யோசித்து எந்த ஒரு செயலிலும் ஈடுபடுவது நல்லது. முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள். ரொம்பவும் காரமாகப் பேசினால் நீங்கள் முன்பு போல இல்லை இப்போது மாறி விட்டதாக சிலர் குறைக் கூறுவார்கள். நெருங்கிய நண்பர்கள், உறவினர்களாக இருந்தாலும் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம்.   
 
புரட்டாசி மற்றும் கார்த்திகை மாதத்தில் பிள்ளைகளால் அலைச்சலும், செலவுகளும் அவர்களுடன் கருத்து மோதல்களும் வந்துப் போகும். கர்ப்பிணிப் பெண்கள் இக்காலக்கட்டத்தில் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்துகளையும் உட்கொள்ள வேண்டாம்.
 
ஐப்பசி மாதப் பிற்பகுதி கார்த்திகை மற்றும் மார்கழி மத்தியப் பகுதி வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய் கிரகண தோஷமடைவதாலும் மாசி மாதம் மத்தியப் பகுதி முதல் பங்குனி மாதம் வரை உள்ள காலக்கட்டத்தில் சனியுடன் சம்பந்தப்படுவதாலும் மேற்கண்ட காலக்கட்டங்களில் சிறுசிறு விபத்துகள், கணவன்-மனைவிக்குள் சந்தேகத்தால் பிரிவுகள், ஏமாற்றங்களும் வந்து நீங்கும். பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்திலும் கவனமாக செயல்படுங்கள்.  
 
மேலும் அடுத்தப் பக்கம்..

04.07.2015 வரை குரு 4-ம் வீட்டில் நிற்பதால் தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். தாயாருக்கு அசதி, சோர்வு, இரத்த அழுத்தம் வந்துச் செல்லும். வீடு பராமரிப்புச் செலவுகளும் அதிகமாகும். வாகனத்திற்கான லைசன்ஸ், இன்சூரன்சையெல்லாம் உரிய காலக்கட்டத்திற்குள் புதுப்பிக்க தவறாதீர்கள். சின்ன சின்ன அபராதம் கட்ட வேண்டி வரும்.
 
05.07.2015 முதல் குரு உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டிற்குள் நுழைவதால் தாயாருக்கு இருந்த நோய் குணமாகும். அவருடனான மோதல்களும் விலகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் குறையும். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பும் வரும். பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். வீண்பழியிலிருந்து விடுபடுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களுடனான மனக்கசப்பு நீங்கும்
 
ஜனவரி 7-ந் தேதி வரை ராகு உங்கள் ராசிக்கு 6-ல் நிற்பதால் ஷேர் மூலமாக பணம் வரும். அயல்நாட்டிலிருக்கும் நண்பர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். சொந்த ஊர் பொதுக் காரியங்களையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்களால் உதவிகள் உண்டு.
 
கேது ராசிக்கு 12-ல் மறைந்திருப்பதால் திடீர் பயணங்கள் உண்டு. நெடுநாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். கனவுத் தொல்லை அதிகரிக்கும். சில நாட்கள் தூக்கம் குறையும்.
 
ஆனால் 8.01.2016 முதல் ராகு 5-ம் வீட்டில் நுழைவதால் பிள்ளைகள் பாதை மாற வாய்ப்பிருக்கிறது. அவர்களின் நட்பு வட்டத்தை கண்காணியுங்கள். சிலர் உத்யோகம், உயர்கல்வியின் பொருட்டு பிள்ளைகளை பிரிய வேண்டிய சூழ்நிலை உண்டாகும். பூர்வீக சொத்து சம்பந்தமாக கோர்டு, கேஸ் என்று நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்க வேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது.
 
9-ந் தேதி முதல் கேது உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் நுழைவதால் தூக்கமில்லாமல் தவித்தீர்களே! இனி ஆழ்ந்த உறக்கம் வரும். ஆன்மிகப் பெரியோரிகளை சந்தித்து ஆசி பெறுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். வீண் அலைச்சல்கள் குறையும்.       
 
வியாபாரத்தில் ஏற்ற-இறக்கங்கள் இருக்கும். காலையில் நன்றாக இருந்தால் மாலையில் சுமாராக இருக்கும். மாலையில் நன்றாக இருந்தால் காலையில் மந்தமாக இருக்கும். புது முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. ரகசியங்கள் கசியக் கூடும். வேலையாட்களுக்கு நீங்கள், சம்பளத்தை உயர்த்திக் கொடுத்தாலும், சலுகைகள் தந்தாலும் அவர்கள் உங்களைக் குறைக் கூறத்தான் செய்வார்கள். பங்குதாரர்கள் அவர்களின் பங்கை கேட்டு தொந்தரவு தருவார்கள்.
 
மேலும் அடுத்தப் பக்கம்..

ஆனி, ஆவணி, புரட்டாசி மாசி மாதங்களில் புது ஒப்பந்தங்களும், திடீர் லாபமும் வரும். புது இடத்திற்கு கடையை மாற்றலாம். பற்று வரவு கணிசமாக உயரும். கமிஷன், புரோக்கரேஜ், ஸ்டேஷனரி, உணவு வகைகளால் லாபமடைவீர்கள்.
 
உத்யோகத்தில் என்னதான் உண்மையாக உழைத்தாலும் எந்த பலனும் இல்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். உண்மையாக இருப்பது மட்டும் போதாது உயரதிகாரிகளுக்கு தகுதாற்போலும் பேசும் வித்தையையும் கற்றுக் கொள்ள வேண்டுமென்ற முடிவிற்கு வருவீர்கள். சக ஊழியர்களின் விடுப்பால் வேலைச்சுமை அதிகமாகும். சிலர் உங்கள் மீது அவதூறு வழக்கு தொடர்வார்கள். புது உத்யோக வாய்ப்புகள் ஆனி, ஆவணி மாதங்களில் வரும். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். சம்பள பாக்கி கைக்கு வரும். 
 
கன்னிப் பெண்களே! ஃபேஸ் புக், டிவிட்டரை கவனமாக பயன்படுத்துங்கள். சிலர் உங்களுடைய பெயருக்கு கலங்கம் விளைவிக்க முயற்சிப்பார்கள். அறிமுகமில்லாதவர்களிடம் அதிக நேரம் பேசிக் கொண்டிருக்க வேண்டாம். காதல் விவகாரத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். ஜீலை மாதம் முதல் சிலருக்கு தடைப்பட்ட உயர்கல்வியை தொடரும் வாய்ப்பு வரும். வெளிநாட்டு நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வரன் அமையும். தாயாருடனான மோதல்கள் விலகும். 
 
மாணவ-மாணவிகளே! தொடக்கத்திலிருந்தே படிப்பில் கவனம் செலுத்துங்கள். கடினமாக உழைத்தால் மட்டுமே கூடுதல் மதிப்பெண் பெற முடியும். அலட்சியமாக இருந்தால் எதிர்பார்த்த கல்விப் பிரிவில் அதிகப் பணம் கொடுத்து, சிலரின் சிபாரிசில் சேர வேண்டி வரும். தகாத நட்புகளையும் தவிர்ப்பது நல்லது.    
 
இந்த மன்மத வருடம் அலைச்சலையும், வேலைச்சுமையையும், பணப்பற்றாக்குறையையும் தந்தாலும் சகிப்புத் தன்மையால் வெற்றியையும், சாதனைகளையும் தருவதாக அமையும்.