வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 13 ஏப்ரல் 2016 (16:41 IST)

சிம்மம் - துர்முகி தமிழ் புத்தாண்டு ராசிபலன் 2016

மனவலிமை மிக்கவர்களே! இந்தப் புத்தாண்டு பிறக்கும் போது உங்களின் யோகாதிபதி செவ்வாய் பகவான் கேந்திர பலம் பெற்று அமர்ந்திருப்பதால் தன்னம்பிக்கை பிறக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.

சிறுக சிறுக சேமித்து வைத்ததில் புறநகர் பகுதியிலாவது ஒரு கால் கிரவுண்டு வீட்டு மனை வாங்க முயற்சி செய்வீர்கள். பெற்றோரின் உடல் நிலை சீராகும். அவர்களுடனான கசப்புணர்வுகள் நீங்கும்.
 
வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பிதுர்வழி சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். வழக்கில் தீர்ப்பு சாதகமாகும். துர்முகி வருடம் பிறக்கும் போது உங்கள் ராசிநாதன் சூரியனும், ஜீவனாதிபதி சுக்ரனும் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் அரசால் அனுகூலம் உண்டு. விலை உயர்ந்த எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் வாங்குவீர்கள். அநாவசியச் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும்.
 
01.08.2016 வரை ராசியிலேயே குரு அமர்ந்து ஜென்ம குருவாக தொடர்வதால் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள். வாயுத் தொந்தரவால் நெஞ்சு வலிக்கும். யூரினரி இன்பெக்ஷன் வந்துச் செல்லும். பெரிய நோய் இருப்பதைப் போன்ற பயம் அவ்வப்போது அடிமனதில் வரும். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகத்தை தவிர்க்கப்பாருங்கள். பிரிவுகள் வரக்கூடும். தண்ணீரை காய்ச்சி அருந்துங்கள்.
 
உங்களைப் பற்றிய வதந்திகளை சிலர் பரப்புவார்கள். கடந்த காலத்தில் ஏற்பட்ட மரியாதைக் குறைவான சம்பவங்களை நினைத்து அவ்வப்போது நிம்மதியிழப்பீர்கள். நெருக்கமான நண்பர்கள் கூட உங்களை தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். இரத்த அழுத்தமும் அதிகரிக்கும். கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. சட்டத்திற்கு புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம். ஆனால் 02.08.2016 முதல் 16.01.2017 வரை மற்றும் 10.03.2017 முதல் 13.04.2017 வரை குரு 2-ம் வீட்டில் அமர்வதால் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். தடைப்பட்டிருந்த சுப நிகழ்ச்சிகளெல்லாம் அடுத்தடுத்து நடந்தேறும்.
 
கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தையும் திருப்பித் தருவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பம் விலகும். நோய் குணமாகும். உடல் நலம் சீராகும். மருந்து, மாத்திரையிலிருந்து விடுபடுவீர்கள். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். வழக்கால் இருந்த நெருக்கடிகள் வந்து நீங்கும். மழலை பாக்யம் கிடைக்கும். வீண் பழியிலிருந்து விடுபடுவீர்கள். சொத்து சேர்க்கை உண்டு.
 
நீங்கள் சொல்லாததையும், சொன்னதாக நினைத்துக் கொண்டு விலகியிருந்த சொந்த-பந்தங்களெல்லாம் வலிய வந்துப் பேசுவார்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். சொந்த ஊர் பொதுக் காரியங்களையெல்லாம் முன்னின்று நடத்தி வைப்பீர்கள். அடகிலிருந்த வீட்டு பத்திரம், நகைகளையெல்லாம் மீட்க வழி வகைப் பிறக்கும். கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு.
 
ஆனால் 17.01.2017 முதல் 09.03.2017 வரை குருபகவான் அதிசாரத்திலும், வக்ரகதியிலும் ராசிக்கு 3-ல் அமர்வதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளையும் பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருந்துக் கொண்டேயிருக்கும். புதிய முயற்சிகள் தாமதமாகி முடியும். பிள்ளைகளின் பொறுப்பற்றப் போக்கை நினைத்து வருந்துவீர்கள். பூர்வீக சொத்து விஷயத்தில் இப்போது தலையிட வேண்டாம். உறவினர்களில் சிலர் மதிக்காமல் போவார்கள்.
 
04.12.2016 முதல் 29.12.2016 வரை சுக்ரன் 6-ல் மறைவதால் நரம்புச் சுளுக்கு, சோர்வு, களைப்பு, வீண் செலவு, வாகன விபத்து, கணவன்-மனைவிக்குள் கசப்புணர்வுகள், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக் சாதனப் பழுதுகளெல்லாம் வந்து நீங்கும்.
 
இந்தாண்டு முழுக்க அர்த்தாஷ்டமச் சனியாக அமர்வதால் சின்ன சின்ன வேலைகளைக் கூட அலைந்து முடிக்க வேண்டி வரும். தவிர்க்க முடியாத செலவுகள் அதிகரிக்கும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்குவீர்கள். தாயாப் பிள்ளையாக இருந்தாலும் வாயும், வயிறும் வேறு என்பதைப் போல எந்த விஷயமாக இருந்தாலும் நீங்களே நேரடியாக தலையிட்டு முடிப்பது நல்லது. சொத்து வாங்கும் போது முறையான பட்டா, வில்லங்க சான்றிதழ்களையெல்லாம் வழக்கறிஞரை வைத்து சரி பார்த்து வாங்குவது நல்லது.
 
சொந்த வாகனத்தில் இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. தாயாருக்கு சிறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரும். அரசின் அனுமதிப் பெறாமல் கூடுதல் தளங்கள் அமைத்து வீடு கட்ட வேண்டாம். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். அக்கம்-பக்கம் வீட்டாருடன் குடும்ப அந்தரங்க விஷயங்களை விவாதிக்க வேண்டாம். உணவில் உப்பை குறைத்துக் கொள்ளுங்கள். புளி ஏப்பம், அல்சர் வரக்கூடும். யாரை நம்புவது, நம்பாமல் இருப்பது என்ற குழப்பம் அதிகமாகும்.
 
இந்த துர்முகி வருடம் முழுவதும் உங்கள் ஜென்ம ராசியிலேயே ராகுவும், 7-ல் கேதுவும் தொடர்வதால் எளிதில் செரிமானமாகும் உணவுகளை உட்கொள்ளுங்கள். உடம்பில் இரும்பு, சுண்ணாம்புச் சத்து குறையும். பச்சை கீரை, காய், கனிகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். அவ்வப்போது முன்கோபப்படுவீர்கள். சர்க்கரையின் அளவையும் சரி பார்த்துக் கொள்ளுங்கள். சாப்பாட்டில் உப்பை குறைத்துக் கொள்ளுங்கள். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம்.
 
உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். தினசரி நடைப்பயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது. குடும்பத்தில் குழப்பம் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். கணவன்-மனைவிக்குள் ஈகோவால் சண்டை வெடிக்கும். பெரிதுப் படுத்திக் கொள்ளாதீர்கள். எந்தப் பிரச்னையாக இருந்தாலும் இருவரும் மனம் விட்டு பேசி முடிகளெடுப்பது நல்லது. மனைவி உங்களுடைய குறைகளை சுட்டிக் காட்டினால் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள். அவருக்கு சின்ன சின்ன அறுவை சிகிச்சை, மாதவிடாய்க் கோளாறு, முதுகுத் தண்டில் வலி வந்துச் செல்லும். அதிக உரிமை எடுத்துக் கொண்டு யாரிடமும் பேசவோ, பழகவோ வேண்டாம். பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் சட்டப்படி ஆவணங்களையெல்லாம் தயாரித்து வழக்கறிஞர் மூலமாக இறங்குவது நல்லது. வெற்றுத் தாளில் கையப்பமிட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள்.
 
உங்களின் யோகாதிபதியான செவ்வாய் 16.01.2017 முதல் 26.02.2017 வரை 8-ல் மறைவதால் வரவுக்கு மிஞ்சிய செலவுகள், சகோதர வகையில் சங்கடங்கள், எதிலும் நம்பிக்கையின்மை, வீடு, மனை வாங்குவது, விற்பதில் சின்ன சின்ன நட்டங்கள், மறைமுக எதிர்ப்புகள் வந்துச் செல்லும்.
 
வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருந்துக் கொண்டேயிருக்கும். அதிக வேலையிருக்கும் நாட்களில் பணியாட்கள் விடுப்பில் செல்வார்கள். பல நேரங்களில் நீங்களே முதலாளி, நீங்களே தொழிலாளி என்ற வகையில் வேலைப் பார்க்க வேண்டி வரும். வருடத்தின் மத்தியப் பகுதியிலிருந்து ஓரளவு லாபம் வரும். விளம்பர யுக்திகளை கையாண்டு லாபம் ஈட்டுவீர்கள். புது சலுகைத் திட்டங்களை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை கவர்ந்திழுப்பீர்கள்.
 
என்றாலும் 4-ம் வீட்டில் சனி நிற்பதால் இரண்டு நாட்கள் வியாபாரம் நன்றாக இருந்தால் மூன்றாவது நாள் கொஞ்சம் மந்தமாக இருக்கும். பிறகு சூடுபிடிக்கும். சினிமா, பதிப்புத்துறை, ஹோட்டல், கிரானைட், டைல்ஸ், மர வகைகளால் ஆதாயமடைவீர்கள். பங்குதாரர்கள் உங்களைப் புரிந்துக் கொள்ள மாட்டார்கள். சில நேரங்களில் சில விஷயங்களுக்கு நீதிமன்றம் சென்று முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். வைகாசி, ஆவணி, தை மாதங்களில் பாக்கிகள் வசூலாகும். வங்கிக் கடன் கிடைத்து உங்கள் ரசனைக் கேற்ற இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள்.
 
உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். மேலதிகாரிகள் வற்புறுத்தினாலும், நீங்கள் நேர் பாதையில் செல்வது நல்லது. இடமாற்றம் உண்டு. சிலர் கட்டாய விடுப்பில் செல்ல வேண்டியிருக்கும். என்றாலும் ஆனி, ஐப்பசி, தை மாதங்களில் அலுவலகத்தில் அமைதி உண்டாகும். ஒதுக்கப்பட்டிருந்த உங்களுக்கு முக்கியத்துவம் அதிகமாகும். வேறு சில புது வாய்ப்புகளும் வரும். சம்பளம் உயரும். உங்கள் மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கிலிருந்து விடுபடுவீர்கள்.
 
கன்னிப் பெண்களே! பெற்றோருக்கு எதிராக எதுவும் செய்துக் கொண்டிருக்க வேண்டாம். எந்த விஷயமாக இருந்தாலும் பெற்றோருடன் இல்லையென்றாலும் சகோதரங்களுடன் பகிர்ந்துக் கொள்வது நல்லது. சிலர் உங்களை நம்ப வைத்து மோசம் செய்வார்கள். உயர்கல்வியை போராடி முடிக்க வேண்டி வரும். வருடத்தின் பிற்பகுதியில் திருமணம் முடியும். சிலருக்கு அயல்நாடு அல்லது வேற்றுமாநிலத்தில் வேலைக் கிடைக்கும்.
 
மாணவ-மாணவிகளே! கடைசி நேரத்தில் படித்துக் கொள்ளலாம் என்று அலட்சியமாக இருந்துவிடாதீர்கள். அன்றைய பாடங்களை அன்றே படித்துவிடுவது நல்லது. விளையாடும் போதும் சின்ன சின்ன காயங்கள் ஏற்படக்கூடும். கவனமாக இருங்கள். போட்டித் தேர்வுகளில் போராடி வெற்றி பெற வேண்டி வரும்.
 
கலைத்துறையினரே! வதந்திகள் ஒருபுறம் இருந்தாலும் மற்றொரு புறம் உங்களின் விடாமுயற்சியால் சாதித்துக் காட்டுவீர்கள். உங்களுடைய படைப்புத் திறன் வளரும்.
 
இந்த தமிழ்ப் புத்தாண்டு மருத்துவச் செலவுகளை தந்தாலும் மகத்தான காரியங்களையும் செய்ய வைக்கும்.
 
பரிகாரம்:

ஸ்ரீபிரித்தியங்கிரா தேவியை வெள்ளிக் கிழமையில் சென்று வணங்குங்கள்.