1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 28 டிசம்பர் 2015 (17:29 IST)

மீனம் - 2016 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

சமாதானத்தால் சாதிப்பவர்களே! உங்களுடைய ராசிக்கு 10-ம் வீட்டில் சூரியனும், புதனும் பலம் பெற்றிருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள்.

கம்பீரமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணவரவு அதிகரிக்கும். உங்களுடைய நிர்வாகத் திறன், ஆளமைத் திறன் அதிகரிக்கும். பதவி கிடைக்கும். வேலைத் தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு எதிர்பார்த்தது போல வேலை அமையும்.
 
மேல்மட்ட அரசியல்வாதிகளின் தொடர்பு கிடைக்கும். நட்பு வட்டம் விரிவடையும். மறைமுக எதிரிகளை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். அரசியலில் செல்வாக்குக் கூடும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். சுக்ரன் ராசிக்கு சாதகமாக இருப்பதால் மற்றவர்கள் ஆலோசனை, துணையின்றி தன்னிச்சையாக செயல்பட்டு முன்னேற வேண்டுமென்று உறுதிமொழி எடுப்பீர்கள். ஒரு சொத்தை விற்று பழைய பிரச்னைகளிலிருந்து வெளி வருவீர்கள். இளைய சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
 
உங்களுடைய ராசிக்கு 6-ம் வீட்டில் இந்த 2016-ம் ஆண்டு பிறப்பதால் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். ஏதாவது காரியமாக வேண்டுமென்றால் உங்கள் காலை பிடிப்பதும், கையைப்பிடிப்பதுமாக இருந்தவர்களையெல்லாம் ஒத்துக்கித் தள்ளுவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். சேமிக்கும் அளவிற்கு வருவாய் அதிகரிக்கும். பழுதான சாதனங்களை மாற்றுவீர்கள். அடிப்படை வசதிகள் பெருகும். நெடுநாட்களாக திட்டமிட்டுக் கொண்டிருந்த சில காரியங்கள் இப்போது முடியும்.
 
08.01.2016 முதல் ராகு 6-ம் வீட்டில் நுழைவதால் சாணக்கியத்தனமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். வீட்டில் உங்களை எதிரியைப் போல் பார்த்த குடும்பத்தினர் இனி பாசத்துடன் நடந்துக் கொள்வார்கள். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். மனைவி மருந்து, மாத்திரையிலிருந்து விடுபடுவார். அவரின் ஆரோக்யம் சீராகும். பிள்ளைகளின் வருங்காலத்திற்காக புது திட்டங்கள் தீட்டுவீர்கள். ஷேர் மூலமாக பணம் வரும். அரைக்குறையாக நின்று போன கட்டிடப் பணிகளை மேற்கொள்வீர்கள்.
 
பழைய வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தள்ளிப் போன அரசாங்க விஷயங்கள் விரைந்து முடிவடையும். பிரச்னைகள் வெகுவாக குறையும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். கூடாப்பழக்க வழக்கங்களிலிருந்து மீள்வீர்கள். வெளியூர் பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். விருந்தினர்களின் வருகை உண்டு. என்றாலும் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன்பாக சட்ட நிபுணர்களை கலந்தாலோசிப்பது நல்லது.
 
என்றாலும் கேது 12-ம் வீட்டில் மறைவதால் மற்றவர்களின் உள்மனதைப் புரிந்துக் கொண்டு செயல்படத் தொடங்குவீர்கள். ஆன்மிக தளங்களுக்குச் சென்று வருவீர்கள். என்றாலும் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். எவ்வளவுப் பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். சில நாட்கள் தூக்கம் குறையும். வெளிநாட்டிலிருக்கும் நண்பர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். பால்ய நண்பர்களை சந்தித்து மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். உறவினர் வீட்டு திருமணம், கிரகப் பிரவேசத்தை நீங்களே செலவு செய்து எடுத்து நடத்துவீர்கள்.
 
புத்தாண்டின் தொடக்கத்தில் செவ்வாய் 8-ல் நிற்பதால் சில நேரங்களில் வாழ்க்கை மீது ஒருவித வெறுப்பு உணர்வு, கசப்பு உணர்வு வந்துச் செல்லும். எல்லோருக்கும் நல்லது செய்தாலும் கெட்ட பெயர்தானே மிஞ்சுகிறது என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள். சகோதரங்கள் கோபப்படுவார்கள். யாரும் தன்னை சரியாகப் புரிந்துக் கொள்ளவில்லை என்று புலம்புவீர்கள். சொத்து வாங்குவது, விற்பதில் அவசரம் வேண்டாம். வெளிவட்டாரத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.
 
புத்தாண்டின் தொடக்கம் முதல் 07.02.2016 வரை மற்றும் 02.08.2016 முதல் வருடம் முடியும் வரை உங்களின் ராசிநாதனும், ஜீவனாதிபதியுமான குருபகவான் 7-ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை பார்த்துக் கொண்டிருப்பதால் போட்டி, பொறாமைகள் குறையும். எல்லோரும் அதிசயிக்கும் படி உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். அழகு, ஆரோக்யம் கூடும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.
 
கணவன்-மனைவிக்குள் காரண காரியம் இல்லாமல் சண்டையிட்டுக் கொண்டீர்களே! இனி அன்யோன்யம் அதிகரிக்கும். உங்களுக்குள் கலகமூட்டியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். மனைவிக்கு வேலைக் கிடைக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக் கட்டும். மனைவிவழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். தாயாரின் உடல் நலம் சீராகும். அவருடன் இருந்த மோதல்களும் விலகும். தாய்வழி சொத்தைப் பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றி புதுசு வாங்குவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு.
 
ஆனால் 08.02.2016 முதல் 01.08.2016 வரை குரு 6-ம் வீட்டிலேயே மறைந்திருப்பதால் அடுத்தடுத்த வேலைச்சுமையால் டென்ஷன் அதிகரிக்கும். குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். வெளியூருக்குச் செல்லும் போது வீட்டை சரியாக பூட்டிச் செல்லவும். சமையல் வாயுக் கசியக் கூடும். கவனம் தேவை. தங்க நகை, இரவல் தர வேண்டாம், இரவல் வாங்கவும் வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட்டு பணம் வாங்கித் தர வேண்டாம். உங்கள் பெயரை சிலர் தவறாகப் பயன்படுத்தவார்கள். வளைந்துக் கொடுத்துப் போக கற்றுக் கொள்ளுங்கள். ஆடம்பரத்திற்காக சந்தையில் புதிதாக அறிமுகமாகும் சோப்பு, ஷாம்பு, வாசனை திரவியங்களையெல்லாம் மாற்றிக் கொண்டிருக்காதீர்கள். தலை முடி உதிர்தல், அலர்ஜி வரக்கூடும்.
 
இந்தாண்டு முழுக்க சனிபகவான் 9-ம் வீட்டிலேயே இருப்பதால் தன்னம்பிக்கை பிறக்கும். தோல்விமனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். அதிக வட்டிக் கடனை குறைந்த வட்டிக் கடன் பெற்று பைசல் செய்வீர்கள். வேற்றுமதத்தவர்கள், மொழியினர்களால் ஆதாயம் உண்டாகும். இங்கு வந்ததிலிருந்து நிம்மதி இல்லையே என்று நினைத்து குடி இருக்கும் வீட்டை மாற்றுவீர்கள். ஓரளவு வாஸ்து, வசதியான வீடு கிடைக்கும்.
 
நீங்கள் சொல்லாததையும் சொன்னதாக நினைத்துக் கொண்டு மனக்கசப்பால் ஒதுங்கியிருந்த உறவினர்கள் பேசத் தொடங்குவார்கள். நிலுவையிலிருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பங்காளிப் பிரச்சனை தீரும். ஆனால் தந்தைக்கு இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சிறுசிறு அறுவை சிகிச்சை, அவருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். பிதுர்வழி சொத்துப் பிரச்னை விஸ்வரூபமெடுக்கும். ஒருபக்கம் பணவரவு இருந்தாலும் மற்றொரு பக்கம் செலவுகளும் இருந்துக் கொண்டேயிருக்கும். அதிகாரத்தில், நல்ல பதவியில் இருக்கும் நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். நகர எல்லையில் வீடு மனை வாங்குவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.
 
27.02.2016 முதல் 09.09.2016 வரை செவ்வாய் சனியுடன் சேர்ந்து நிற்பதால் மனஇறுக்கம் உண்டாகும். சின்ன சின்ன பிரச்னைகளையெல்லாம் பெரிதுப்படுத்த வேண்டாம். உடன்பிறந்தவர்களுடன் மோதல்கள் வந்துச் செல்லும். வெளிப்படையாகப் பேசி பிரச்னைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள். மனைவி உரிமையுடன் எதையாவது பேசினால் அதை லென்ஸ் வைத்து பார்த்து தப்புக் கண்டு பிடிக்காதீர்கள். அவருக்கு கர்பப்பை வலி, கணுக்காலில் கட்டி, சிறுநீரக கல் ஏற்படக்கூடும். பணத்தட்டுப்பாடு வரும். குடும்பத்திலுள்ளவர்களை சந்தேகப்பட வேண்டாம். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள்.
 
வியாபாரத்தில் இழப்புகளை சரி செய்வீர்கள். பற்று வரவு கணிசமாக உயரும். புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. கடையை முக்கிய சாலைக்கு மாற்றுவீர்கள். உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தாற் போல் ஒருவர் பங்குதாரரா£க அறிமுகமாவார். துணி, பதிப்பகம், சிமெண்ட், இரும்பு, எண்டர்ப்ரைசஸ் வகைகளால் ஆதாயமடைவீர்கள். வங்கியில் வாங்கியிருந்த கடனை ஒருவழியாக கட்டி முடிப்பீர்கள். சந்தையில் புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
 
உத்யோகத்தில் உயரதிகாரி சில சமயங்களில் உங்களை கடிந்துப் பேசினாலும் அன்பாக நடந்து கொள்வார். பணியிலிருந்த தேக்க நிலை மாறும். உங்கள் மீது வீண்பழி சுமத்திய உயரதிகாரி மாற்றப்படுவார். அதிகாரிகள் புது பொறுப்பை ஒப்படைபார்கள். சக ஊழியர்களும் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். அலுவலகத்தில் மதிப்புக்  கூடும். சம்பள பாக்கி கைக்கு வரும். எதிர்பார்த்த பதவி உயர்வு தடையின்றி கிடைக்கும்.
 
கன்னிப்பெண்களே! நிஜம் எது, நிழல் என்பதை தெளிவாக உணர்வீர்கள். காதல் குழப்பங்கள் நீங்கும். விடுபட்ட பாடத்தை மீண்டும் எழுதி தேர்ச்சி பெறுவீர்கள். கல்யாணம் கூடி வரும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும்.
 
மாணவ-மாணவிகளே! நினைவாற்றல் அதிகரிக்கும். சக மாணவர்கள் மத்தியில் பாராட்டப்படுவீர்கள். கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் பதக்கம் வெல்வீர்கள். நல்லவர்களின் நட்பால் முன்னேறுவீர்கள்.
 
கலைத்துறையினரே! யதார்த்தமான உங்களுடைய படைப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமாகும். பிறமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள்.
 
அரசியல்வாதிகளே! தலைமைக்கு நீங்கள் நெருக்கமாக இருந்தாலும், மாவட்டமும், வட்டமும் விரித்த வலையில் சிக்கினீர்களே! இனி பெரிய பொறுப்புகள் தேடி வரும். தேர்தலில் வெற்றி கிட்டும்.
 
விவசாயிகளே! மாற்றுப்பயிர் செய்து அதிக லாபம் ஈட்டுவீர்கள். வாய்க்கால், வரப்புச் சண்டை தீரும். மகளின் திருமணத்தை விமர்சையாக முடிப்பீர்கள்.
 
ஆகமொத்தம் இந்த வருடம் தொட்ட காரியங்கள் துலங்குவதுடன், இடையிடையே நெருக்கடிகளையும் தந்து முடிவில் வெற்றிக் கனிகளையும் பறிக்க வைப்பதாக அமையும்.
 
பரிகாரம்
 
கும்பகோணம் ஸ்ரீசாரங்கப்பாணி பெருமாளை வியாழக் கிழமையில் சென்று தரிசனம் செய்யுங்கள். இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்.