1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 26 டிசம்பர் 2015 (15:27 IST)

மேஷம்: ராகு, கேது பெயர்ச்சிப் பலன்கள்

எதிலும் முதலிடத்தை பிடிக்க வேண்டுமென்று நினைப்பவர்களே! அப்படிப்பட்ட உங்களுக்கு 08.01.2016 முதல் 25.07.2017 வரை உள்ள காலகட்டத்தில் இந்த ராகுவும், கேதுவும் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்ப்போம்.
 
இராகுவின் பலன்கள்:
 
இதுவரை உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்து கொண்டு புகழையும், கௌரவத்தையும், ஓரளவு பணப்புழக்கத்தையும் தந்தாலும் மறுபுறம் கடன் பிரச்னைகள், வீண் பகை என்றெல்லாம் கலங்கடிக்கவும் செய்த ராகு பகவான். இப்போது உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். ஐந்தாம் இடம் ராகுவுக்கு உகந்த இடமல்ல.. என்றாலும் உங்கள் யோகாதிபதி சூரியனின் வீட்டில் அமர்வதால் கெடுபலன்களை குறைத்து நல்லதையே செய்வார். குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் நீங்கி இனி சந்தோஷம் நிலைக்கும். கணவன்-மனைவிக்குள் நிலவி வந்தப் பனிப்போர் விலகும். அன்யோன்யம் அதிகரிக்கும்.
 
புத்தி ஸ்தானமான 5-ம் வீட்டில் ராகு அமர்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். மற்றவர்களை எப்போதுமே சந்தேகக் கண்ணுடன் பார்க்காதீர்கள். பிள்ளைகள் இன்னும் கொஞ்சம் பொறுப்பாக நடந்துக் கொண்டால் நலமாக இருக்குமே என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள். அவ்வப்போது குறைகளை கண்டுப்பிடித்து வருத்தமடைவீர்கள். நிறைகளையும் பாராட்டத் தயங்காதீர்கள்.
 
உயர்கல்வி, உத்யோகத்தின் பொருட்டு சிலர் பிள்ளைகளை பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். அவர்கள் உங்களுக்கு எதிரானவர்களிடம் சென்று சேராமல் பார்த்துக் கொள்ளுங்கள். பூர்வீக சொத்துப் பிரச்னையை சுமூகமாக தீர்க்கப் பாருங்கள். கோர்ட், கேஸ் என்று நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்காதீர்கள். மகனின் நட்பு வட்டத்தை கண்காணிப்பது நல்லது. அவர் கூடாப்பழக்க வழக்கங்களில் சிக்கிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.
 
மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். பழைய கடனை நினைத்து பயம் வந்துப் போகும். உறவினர், நண்பர்கள் மத்தியில் உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகமாகும். எதிர்மறை எண்ணங்கள் அதிகமாகும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். என்றாலும் வி.ஐ.பிகளின் தொடர்புகள் கிடைக்கும்.
 
நீண்ட நாளாக போக வேண்டுமென்று நினைத்திருந்த குலதெய்வக் கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று நேர்த்திக் கடனை செலுத்துவீர்கள். வேற்றுமதத்தவர்கள், பிற மொழியினரால் திடீர் திருப்பம் உண்டாகும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிந்துக் கொள்வீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பொது அறிவுத் திறனை வளர்த்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். சிலர் பூர்வீக சொத்தை விற்று சில பிரச்னைகளிலிருந்து வெளிவருவீர்கள். வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும்.
 
இராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்களின் பூர்வ புண்யாதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் முதல் பாதத்தில் 08.01.2016 முதல் 10.03.2016 வரை ராகுபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் மாறுபட்ட யோசனைகள் உதயமாகும். வீட்டில் தள்ளிப் போன சுப நிகழ்ச்சிகளெல்லாம் அடுத்தடுத்து நடைபெறும். தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். பிள்ளைகள் தங்கள் தவறை உணருவார்கள். அவர்களின் கல்வி, வேலை, திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் வெற்றியடையும். அரசால் அனுகூலம் உண்டு. பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாகும்.
 
ராகு பகவான் உங்கள் தன-சப்தமாதிபதியான சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் 11.03.2016 முதல் 15.11.2016 வரை செல்வதால் திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். மனைவியின் ஆரோக்யம் சீராகும். விலகிச் சென்ற சொந்தம்-பந்தங்களும் இனி தேடி வருவார்கள். நெடுநாள் கனவான இருந்த வீடு, வாகனம் வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும்.
 
கேதுவின் மகம் நட்சத்திரத்தில் 16.11.2016 முதல் 25.7.2017 வரை ராகுபகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் எதிலும் நம்பிக்கையின்மை, சிறு சிறு விபத்துகள், ஏமாற்றங்கள், இழப்புகள் மற்றும் உறவினர்கள் மத்தியில் மனக்கசப்புகள் வந்து நீங்கும். உடம்பில் இரும்புச் சத்துக் குறைப்பாடு ஏற்படக்கூடும். கை, கால் மரத்துப் போகும். பண விரையங்களும் வரும்.
 
கன்னிப் பெண்களே! காதல் கசந்து இனிக்கும். நல்லவர்களின் நட்பால் முன்னேற்றம் உண்டாகும். பெற்றோருக்கு எதிராக எதுவும் செய்துக் கொண்டிருக்க வேண்டாம். எந்த விஷயமாக இருந்தாலும் பெற்றோருடன் இல்லையென்றாலும் சகோதரங்களுடன் பகிர்ந்துக் கொள்வது நல்லது. உயர்கல்வியில் சேரும் போது உங்களுக்கு ஏற்ற சரியான பிரிவை தேர்ந்தெடுப்பது நல்லது. உங்களுடைய கல்வி தகுதிக் கேற்ப நல்ல வேலையும் கிடைக்கும்.
 
மாணவ-மாணவிகளே! விடைகளை எழுதிப்பாருங்கள். பொழுது போக்குகளை பிறகு பார்த்துக் கொள்ளலாம். படிப்பில் கொஞ்சம் கவனம் செலுத்தலாமே! இசை, ஓவியம், கட்டுரைப் போட்டிகளில் கலந்துக் கொண்டு வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் போராடி சேர வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
 
அரசியல்வாதிகளே! தலைமையை பற்றி விமர்சனம் செய்து கொண்டிருக்காமல், தொகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யப்பாருங்கள். சகாக்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். அண்டை அயலாருடன் குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
 
கலைத்துறையினரே! சின்ன சின்ன வாய்ப்புகளை கடந்து இப்போது பெரிய வாய்ப்புகளும் வரும். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள்.
 
விவசாயிகளே! வண்டுக்கடி, பூச்சி மற்றும் எலித் தொல்லை நீங்கி மகசூல் கூடும். தானிய வகைகள், மூலிகை வகைகளால் ஆதாயம் பெறுவீர்கள்.
 
வியாபாரத்தில் விளம்பர யுக்திகளை கையாண்டு லாபம் ஈட்டுவீர்கள். பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். ஆனால் முன்பின் அனுபவமில்லாத தொழிலில் சிலரின் தவறான அறிவுரையால் முதலீடு செய்து நட்டப்பட வேண்டாம். நண்பர்களின் உதவியுடன் கடையை விரிவுப்படுத்தி, அழகுப்படுத்துவீர்கள். பிளாஸ்டிக், மூலிகை, துரித உணவகம், எண்டர்ப்ரைசஸ் வகைகளால் லாபமடைவீர்கள். அரசாங்க கெடுபிடிகள் வந்துப் போகும். பங்குதாரர்களுடன் அனுசரித்துப் போங்கள்.
 
உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகமானாலும் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். திறமைகளை வளர்த்துக் கொள்ள வாய்ப்பு கிட்டும்.
 
கேதுவின் பலன்கள்:
 
இதுவரை உங்களின் ராசிக்கு 12-ம் வீட்டில் அமர்ந்து கொண்டு திடீர் பயணங்களையும், வீண் அலைக்கழிப்புகளையும், தூக்கமின்மையையும், அநவாசியச் செலவினங்களையும் தந்த கேது பகவான் இப்போது லாப வீடான 11-ம் வீட்டில் வந்தமர்கிறார். தள்ளிப் போன தடைப்பட்ட காரியங்களெல்லாம் இனி முடிவடையும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். ஆன்மிகவாதிகள், சாதுக்களின் நட்பால் தெளிவடைவீர்கள். எதிர்பார்த்த வகையில் பணவரவு உண்டு. பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும்.
 
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். குழந்தை பாக்யம் உண்டாகும். ஷேர் மூலமாக பணம் வரும். விலை உயர்ந்த ரத்தினங்கள், ஆபரணங்கள் வாங்குவீர்கள். பாதியில் நின்ற வீடு கட்டும் பணி முழுமையடையும். சிலர் சொந்த தொழில் தொடங்குவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வீண் விவாதங்கள், சண்டையிலிருந்து ஒதுங்குவீர்கள். கோபம் குறையும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும்.
 
கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
உங்கள் யோகாதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 08.01.2016 முதல் 12.07.2016 வரை கேதுபகவான் செல்வதால் தொட்ட காரியம் துலங்கும். வீட்டில் மங்கள இசை முழங்கும். பெரிய பதவிகள் தேடி வரும். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். அயல்நாடு சென்று வருவீர்கள். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். தந்தையாரின் உடல் நிலை சீராகும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயம் உண்டு.
 
ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் 13.07.2016 முதல் 20.03.2017 வரை கேதுபகவான் செல்வதால் வீண் டென்ஷன், முன்கோபம், எதிலும் பிடிப்பற்றப் போக்கு, பணப்பற்றாக்குறை, ஈகோப் பிரச்னைகள் வந்துச் செல்லும். யாருக்காகவும் சாட்சி கையப்பமிட வேண்டாம். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வீண் பழிச் சொல்லுக்கு ஆளாவீர்கள். அநாவசியமாக மற்றவர்கள் விஷயத்தில் தலையிட்டு சிக்க வேண்டாம். கூடாப்பழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்த்துவிடுங்கள். அவசர முடிவுகள் வேண்டாம்.
 
உங்கள் ராசிநாதனும்-அஷ்டமாதிபதியுமான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் 21.03.2017 முதல் 25.07.2017 வரை கேதுபகவான் செல்வதால் அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். சகோதரங்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அழகு, ஆரோக்யம் கூடும். புதிதாக வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். எதிர்பாராத பயணங்கள் அதிகரிக்கும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வாகனம் வாங்குவீர்கள். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.
 
வியாபாரத்தில் முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் பெரிய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். இங்கிதமாகப் பேசி வாடிக்கையாளர்களை கவருவீர்கள். புது கிளைகள் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். எதிர்பார்த்த சலுகைகளும், சம்பள உயர்வும் தடையின்றி கிடைக்கும்.
 
இந்த ராகு-கேது மாற்றம் ஆற்றில் ஒருகால் சேற்றில் ஒருகாலாக இருந்த உங்களை திடப்படுத்தி, தீர்க்கமான முடிவுகளை எடுக்க வைப்பதாகவும், பணப்புழக்கத்தை அதிகப்படுத்துவதாகவும் அமையும்.
 
பரிகாரம்:
 
திருப்பூருக்கு அருகிலுள்ள அவினாசியில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீபெருங்கருணையம்மை உடனுறை ஸ்ரீ அவினாசீச்சுரரை ஏதேனும் ஒரு திங்கட் கிழமைகளில் சென்று வணங்குங்கள். தகப்பனில்லாப் பிள்ளைக்கு உதவுங்கள்.