1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 28 டிசம்பர் 2015 (17:26 IST)

கும்பம் - 2016 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

யதார்த்தத்தை விரும்புபவர்களே! உங்கள் ராசிக்கு 7-வது வீட்டில் சந்திரன் அமர்ந்து உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த 2016-ம் வருடம் பிறப்பதால் உங்கள் ரசனை மாறும்.

அரைகுறையாக நின்ற வேலைகள் முழுவதுமாக முடியும். திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிட்டும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். மனஇறுக்கம் குறையும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். பழைய சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாத படி அடுத்தடுத்து செலவுகள் வந்ததே! இனி அந்த அவலநிலை மாறும். கணவன்-மனைவிக்குள் சந்தேகத்தால் வீண் சச்சரவுகளும், உறவினர்களால் தொல்லைகளும் வந்ததே! இனி அன்யோன்யம் அதிகரிக்கும். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். பொது விழாக்கள், கல்யாண, கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள்.
 
இந்த வருடம் பிறக்கும் போது சூரியனும், புதனும் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் உங்களுடைய புகழ், கௌரவம் ஒருபடி உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். பூர்வீக சொத்தில் மாற்றம் செய்வீர்கள். பிள்ளைகள் தங்களது தவறை உணருவார்கள். மகளின் கல்யாணத்தை ஊரே மெச்சும்படி நடத்துவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும்.
 
நல்ல இடத்தில் மணப்பெண்ணும் அமையும். எவ்வளவோ வசதி, வாய்ப்புகள் இருந்தும் வீட்டில் துள்ளி விளையாட ஒரு வாரிசு இல்லையே என வருந்திய தம்பதியர்களுக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். மனைவி உங்களுடைய புது முயற்சிகளை ஆதரிப்பார். உறவினர், நண்பர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். சுக்ரன் சாதகமாக இருப்பதால் விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். பெற்றோரின் ஆரோக்யம் சீராகும்.
 
இந்த வருடம் முழுக்க உங்கள் ராசிநாதன் சனிபகவான் 10-ம் வீட்டிலேயே தொடர்வதால் உங்களின் உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். வேலைகளை முடிக்காமல் ஓயமாட்டீர்கள். எதிர்பார்த்த வகையில் பணவரவு உண்டு. உங்களின் முதிர்ச்சியான பேச்சில் அறிவு வெளிப்படும். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். அரசாங்க விஷயங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். வேற்றுமதத்தவர்கள் உதவுவார்கள்.
 
அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். உங்களுடன் பழகிக் கொண்டே உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை புறந்தள்ளுவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். இயக்கம், சங்கம் இவற்றில் புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வி.ஐ.பிகள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்ளுமளவிற்கு நெருக்கமாவீர்கள். புது முதலீடு செய்து சிலர் வியாபாரம் தொடங்குவீர்கள்.
 
மகான்கள், சித்தர்களின் ஜீவசமாதி சென்று வருவீர்கள். தொலைந்துப் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும். சிறுக சிறுக சேமித்து வைத்ததில் புறநகர் பகுதியிலாவது ஒரு கால் கிரவுண்டு வீட்டு மனை வாங்க முயற்சி செய்வீர்கள். கடந்த கால சுகமான அனுபவங்களை நினைவுக் கூர்ந்து மகிழ்வீர்கள். வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். உத்யோகத்தில் அடிக்கடி இடமாற்றம் வந்துப் போகும். மேலதிகாரி உங்கள் திறமையை குறைத்து மதிப்பிடுவார். மறைமுக அவமானம் ஏற்படக்கூடும்.
 
புத்தாண்டின் தொடக்கம் முதல் 07.02.2016 வரை மற்றும் 02.08.2016 முதல் வருடம் முடியும் வரை உங்களின் தன-லாபாதிபதியுமான குரு 8-ம் வீட்டில் மறைந்திருப்பதால் தன் பலம் பலவீனத்தை உணருவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். சில இடங்களில் சில நேரங்களில் ஆழமான உறவுகளை விட பணத்திற்குத்தான் மரியாதை கிடைக்கிறது என்ற உண்மையை கண்கூடாகப் பார்ப்பீர்கள். வீண் அலைக்கழிப்புகள் அதிகமாகும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். தோற்றுவிடுவோமோ என்ற ஒரு அவநம்பிக்கையும் வந்துப் போகும்.
 
எந்த ஒரு காரியத்தையும் இரண்டு, மூன்று முறை போராடி முடிக்க வேண்டி வரும். அதற்காக அலுத்துக் கொள்ளாதீர்கள். அநாவசியப் பேச்சுகள் வேண்டாமே. சிலரின் தவறான செயல்களை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள். சிலர் காரியம் ஆக வேண்டுமென்றால் காலைப் பிடிக்கிறார்கள். காரியம் ஆனப்பிறகு காலை வாருகிறார்கள் என்று ஆதங்கப்படுவீர்கள். சிம சயங்களில் தனிமைப்படுத்தப்பட்டதை போல் உணர்வீர்கள்.
 
ஆனால் 08.02.2016 முதல் 01.08.2016 வரை 7-ம் வீட்டில் அமர்ந்து குரு உங்கள் ராசியை நேருக்கு நேர் பார்ப்பதால் சுருங்கியிருந்த முகம் மலரும். தோற்றப்பொலிவு கூடும். குடும்பத்தில் சில முக்கிய பொறுப்புகள் உங்கள் கைக்கு மாறும். உங்களின் அறிவுரைக்கு எல்லோரும் செவி சாய்ப்பார்கள். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள்.
 
வங்கிக் கடனுதவியுடன் சொந்த வீடு வாங்குவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். சொத்துப் பிரச்சனை தீரும். அயல்நாட்டிலிருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அண்டை அயலாருடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். சொந்த-பந்தங்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். உங்களுடைய தனித்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள்.
 
07.01.2016 வரை ராகு 8-வது வீட்டிலும், கேது 2-லும் நிற்பதால் பார்வைக் கோளாறு, பல் வலி, பேச்சில் தடுமாற்றங்கள், தர்ம சங்கமான சூழ்நிலைகள் வந்து நீங்கும். 08.01.2016 முதல் வருடம் முடிய உங்கள் ராசிக்குள் கேதுவும், 7-ம் வீட்டில்  ராகுவும் அமர்கிறார்கள். கேது ராசிக்குள் வருவதால் தலைச் சுற்றல், சோர்வு, காய்ச்சல், குமட்டல், நாக்கில் கசப்பு வந்து நீங்கும். முன்கோபம் அதிகமாகும். நேரம் கிடைக்கும் போது யோகா, தியானம் செய்யத் தவறாதீர்கள். எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. எதிர்பார்த்த வேலைகள் தாமதமாக முடிவடையும். நெஞ்சு வலிக்கும். நேர்மறை எண்ணங்களை உள்வளர்த்துக் கொள்ளப்பாருங்கள்.
 
வாங்கிய கடனை எப்படி அடைக்கப் போகிறோமோ என்ற பயம் வரும். பழைய நண்பர்களுடன் மோதல்கள் வந்துப் போகும். எண்ணெய் பதார்த்தம் மற்றும் கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. குடும்பத்திலும் விட்டுக் கொடுத்தப் போவது நல்லது. திடீரென்று அறிமுகமாகி உங்களை அதிகம் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் புது நண்பர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.
 
7-ம் வீட்டில் ராகு அமர்ந்திருப்பதால் வீண் விரயம், ஏமாற்றம், சின்ன சின்ன இழப்புகள் வந்துச் செல்லும். வீண் சந்தேகம், ஈகோப் பிரச்னையால் கணவன்-மனைவிக்குள் பிரிவுகள் வரக்கூடும். எந்தப் பிரச்னையாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசுவது நல்லது. மனைவி ஏதேனும் குறைக் கூறினாலும் அதை அப்படியே மறந்து விடுவது நல்லது. நீ இப்படி பேசுவதற்கு பின்னால் யார் இருக்கிறார் என்று தெரியவில்லையே. உன்னை யாரோ தூண்டி விடுகிறார்கள் என்றெல்லாம் மனைவியுடன் எதிர்வாதம் செய்துக் கொண்டிருக்க வேண்டாம்.
 
ஆனால் இதன் பின்னனி என்ன என்றெல்லாம் யோசிக்காதீர்கள். பழசை சொல்லிக் காட்டாதீர்கள். நாலுகாசு கூட கையில் சேர விடமாட்டார். அப்படியே சேர்ந்தாலும் அதற்கென ஓரு செலவை உருவாக்கி காசை கரைய வைப்பார். இப்படியே வாழ்க்கை போய் விடுமோ என சில நேரங்களில் பயந்து புலம்புவீர்கள். மனைவிவழி உறவினர்களுடன் மோதல்கள் வந்துச் செல்லும். விலை உயர்ந்தப் பொருட்களை இழக்க நேரிடும். கவனமாக இருங்கள். நெருக்கமாகப் பழகிக் கொண்டிருப்பவர்கள் கூட உங்களை பகைத்துக் கொள்வார்கள்.
 
வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து அதற்கேற்ப செயல்படுவீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் கிடைக்கும். என்றாலும் போட்டிகளால் லாபம் குறையும். வேலையாட்கள் கொஞ்சம் முரண்டு பிடிக்கத்தான் செய்வார்கள். பங்குதாரர்களால் சின்ன சின்ன விரயங்கள் ஏற்படும். ஷேர், ஸ்பெகுலேஷன், ஸ்டேஷனரி, விடுதி, அழகு சாதனப் பொருட்கள் மூலம் லாபமடைவீர்கள். புது ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். கடையை வேறிடத்திற்கு மாற்றுவீர்கள்.
 
உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரித்தாலும் புதிய அனுபவங்களை கற்றுக் கொள்வீர்கள். உங்களுடைய திறமையை மேலும் அதிகரித்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். என்றாலும் உங்களைத் தாக்கிப் பேசினாலும் பதட்டப்படாதீர்கள். திடீர் இடமாற்றம் உண்டு. சக ஊழியர்களில் ஒருசிலர் இரட்டை வேடம் போடுவதையும் நீங்கள் உணர்ந்துக் கொள்வீர்கள். அடிக்கடி விடுப்பில் செல்லாதீர்கள். சிலருக்கு அயல்நாட்டு நிறுவனங்களில் புது வாய்ப்புகள் வரும். மேலதிகாரியிடம் நற்பெயர் எடுக்க கொஞ்சம் போராட வேண்டி வரும்.
 
கன்னிப் பெண்களே! கசந்த காதல் இனிக்கும். இங்கிதமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள். தவறான எண்ணங்களுடன் பழகியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். வேற்றுமதத்ததை சேர்ந்தவர்கள் தோழிகளாக அறிமுகமாவார்கள். தூக்கமின்மை, மாதவிடாய்க் கோளாறு வந்துச் செல்லும்.
 
மாணவ-மாணவிகளே! மொத்தமாக படித்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடாமல் அன்றைய பாடங்களை அன்றே படித்துவிடுவது நல்லது. வகுப்பறையில் முன் வரிசையில் அமருங்கள். விளையாட்டில் வெற்றியுண்டு.
 
கலைத்துறையினரே! வெகுநாட்களாக தடைபட்ட வாய்ப்பு இனி கூடி வரும். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். வெளிநாட்டு புது நிறுவனங்கள் உங்களுக்கு வாய்ப்பளிக்கும்.
 
அரசியல்வாதிகளே! ஆதாரமில்லாமல் எதிர்கட்சிக்காரர்களை விமர்சிக்க வேண்டாம். தலைமையின் அன்புக்கு பாத்திரமாவீர்கள். என்றாலும் சகாக்களிடம் நிதானமாக பழகுங்கள்.
 
விவசாயிகளே! சொத்துப் பிரச்சனைகளை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு மகசூலை அதிகப்படுத்த முயற்சி எடுங்கள். வெளியில் கடன் வாங்க வேண்டி வரும்.
 
இந்தப் புத்தாண்டு முதல் முயற்சியில் எந்த வேலையையும் முடிக்க முடியாமல் உங்களை அலைக்கழித்தாலும், சவால்களை சமாளித்து சாதிக்க வைக்கும்.
 
பரிகாரம்:
 
திருச்சியில் அருள்பாலிக்கும் ஸ்ரீதாயுமானவர் சுவாமியை வில்வார்ச்சனை தந்து வணங்கி வாருங்கள். பழுதடைந்த பள்ளியைப் புதுப்பிக்க உதவுங்கள்.