1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Veeramani
Last Updated : செவ்வாய், 15 ஏப்ரல் 2014 (13:59 IST)

பாஜக வேட்பாளர் மீது தாக்குதல்: வைகோ, பொன்.ராதாகிருஷ்ணன், அன்புமணி கண்டனம்

தஞ்சை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் தாக்கப்பட்டதற்கு கூட்டணி கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
Vaiko condemn
பாரதீய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளரும், தஞ்சை நாடாளுமன்ற தொகுதி தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளருமான முருகானந்தம் மல்லிப்பட்டினத்துக்கு வாக்காளர்களைச் சந்திக்க பிரச்சாரத்துக்குச் சென்றபோது, பயங்கர ஆயுதங்களுடன் வேட்பாளரையும், அவர் உடன் வந்தவர்களையும் தாக்கியுள்ளனர். வேட்பாளருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. வேட்பாளர் மயிரிழையில் உயிர் தப்பினார். உடன் வந்தவர்களும் பலத்த காயமுற்றனர்.
 
தஞ்சை வேட்பாளர் மீதும், அவருடன் சென்றோர் மீதும் வன்முறை தாக்குதல் நடத்திய அராஜக ரவுடி கும்பலுக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கிறேன். இந்த வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
 
பாரதீய ஜனதா மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருப்பதாவது:–

தஞ்சை மாவட்டம் மல்லிபட்டிணத்தில் விஷம சக்திகளால் நடத்தப்பட்ட வன்முறை தாக்குதல், பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தை சீர்குலைக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்டதாகும். தாக்குதலை வன்மையாக கண்டிப்பதுடன், வன்முறையாளர் மீது தகுந்த நடவடிக்கையும் எடுக்க தமிழ்நாடு பாஜக கேட்டுக் கொள்கிறது.
Pon.Radhakrishnan condemn
இந்த தாக்குதலுக்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும். இந்தியாவில் எந்த ஒரு பகுதியிலும் வாக்காளர்களை சந்தித்து தேர்தல் பிரச்சாரம் செய்வது ஜனநாயக உரிமை ஆகும். இதை யாரும் தடுக்க முடியாது. இனி இதுபோன்ற ஜனநாயக விரோத வன்முறை சம்பவங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறையினரை கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
 
பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்:–
 
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது அதிகரித்திருக்கிறது. பாமகவை சேர்ந்த அரக்கோணம் தொகுதி வேட்பாளர் அரங்க.வேலு, ஆரணி வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி, மயிலாடுதுறை வேட்பாளர் க.அகோரம் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தருமபுரி தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட என் மீது பெத்தூர் காலனி என்ற இடத்தில் கல்வீச்சு நடத்தப்பட்டது. இப்போது தஞ்சாவூர் தொகுதியில் பாரதீய ஜனதா வேட்பாளர் கருப்பு முருகானந்தம் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
ஜனநாயகத்திற்கு எதிரான இதுபோன்ற தாக்குதல்களை தேர்தல் ஆணையமும், காவல்துறையும் தடுத்து நிறுத்துவதுடன், இதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர்கள் அனைவருக்கும் போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அன்புமணி கூறியுள்ளார்.