1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 1 ஏப்ரல் 2014 (13:02 IST)

டாஸ்மாக் விடுமுறை: குடிமகன்களுக்கு மூன்று நாட்கள் திண்டாட்டம்

மக்களவைத் தேர்தலையொட்டி மதுக்கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்க தமிழக தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

பொதுவாக தேர்தல் தினத்துக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக மதுக்கடைகள் மூடப்பட வேண்டும். அதன்படி தமிழகத்தில் ஏப்ரல் 24 ஆம் தேதி தேர்தல் நடப்பதால், ஏப்ரல் 22ஆம் தேதி மாலை 6 மணியில் இருந்து மதுக்கடைகளை அடைக்க வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக 60 ஆயிரத்து 418 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. வாக்காளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தாலும், வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை உயர்த்தப்படமாட்டாது என்று தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். மேலும் ஒரு வாக்குச்சாவடிக்கு அதிகபட்சம் 1,500 வாக்காளர்கள் என்ற விகிதத்தில் ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறியுள்ளார்.
 
தேர்தல் பணியில் தற்போது 3 லட்சம் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு முதல் கட்ட பயிற்சி முடிந்துவிட்டது. வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் முடிவாகி, அவர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டு, வாக்குப்பதிவு எந்திரத்தில் ஒட்டப்பட வேண்டிய ஓட்டுச்சீட்டு அச்சிடப்பட்டதும் இரண்டாம் கட்ட பயிற்சி அளிக்கப்படும். இறுதிக்கட்ட பயிற்சி, தேர்தலுக்கு முந்திய நாள் தரப்பட உள்ளது.
 
தேர்தல் தினத்தன்று அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் விடுமுறை அளிக்காவிட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளில் மதுக் கடைகளில் அதிக கூட்டம் கூடி, மொத்தமாக மதுபாட்டில்கள் வாங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதை தவிர்ப்பதற்காக, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை 22 ஆம் தேதி காலையில் இருந்தே மூடுவதற்கு உத்தரவிட வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தமிழக தேர்தல் அதிகாரி பரிந்துரைத்துள்ளார். உத்தரவு வந்துவிட்டால், ஏப்ரல் 22, 23, 24 ஆகிய 3 நாட்களும் முழுமையாக மதுக்கடை மூடப்பட்டும். இதனால் குடிமக்கள் பெரும் வருத்தத்தில் உள்ளனர்.