செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 26 மார்ச் 2014 (12:28 IST)

சிறுமி பலாத்காரம்: போராட்டம் நடத்திய 340 பேர் கைது

சேலம் அருகே 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவரை கைது செய்யாததை கண்டித்து சாலை மறியல் செய்த 340 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 
அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள மின்னாம் பள்ளி பொன்மலை பகுதியை சேர்ந்த 8 வயது மதிக்கத்தக்க 3–ம் வகுப்பு படிக்கும் மாணவியை அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்தது கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரியவந்தது.
 
இதையடுத்து மாணவியின் பெற்றோர் காரிப்பட்டி காவல் நிலையத்தில் அந்த நபர் குறித்து புகார் செய்தனர். ஆனால் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியும், அந்த வாலிபரை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரியும் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் நேற்று சாலை மறியல் செய்தனர்.
 
இதனால் சேலம்–பேளூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுப்பற்றி தெரியவந்ததும் வாழப்பாடி டி.எஸ்.பி. மாதவன், காரிப்பட்டி ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
 
அப்போது அவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். இதையடுத்து அங்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். திடீரென பொதுமக்கள் அங்கிருந்து புறப்பட்டு அயோத்தியாப் பட்டணம் பகுதிக்கு மறியல் செய்ய புறப்பட்டனர். இதையடுத்து செல்லியம்பாளையம் பிரிவு சாலை பகுதியில் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
 
இதையடுத்து கூட்டத்தை கலைக்க காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். சம்பவ இடத்துக்கு காவல் கண்காணிப்பாளர் சக்திவேல், வருவாய் கோட்டாட்சியர் லீலாவதி உள்ளிட்ட அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டாலும் அங்கு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 
சாலை மறியல் செய்த 100 பெண்கள் உள்பட 340 பேர் மீது காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ஆரோக்கியதாஸ் (29) என்பவரை கைது செய்தனர்.