செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: வெள்ளி, 18 ஏப்ரல் 2014 (18:07 IST)

கிணற்றில் மிதந்த தலையில்லாத உடல்: கொடூரமான கொலை

திருநெல்வேலி தச்சநல்லூரில் இளைஞரின் தலையை துண்டித்து கொலை செய்த மர்மகும்பல், சடலத்தை கிணற்றில் வீசிச் சென்றுள்ளனர்.
 
நெல்லை தச்சநல்லூர் நல்மேய்ப்பர் நகரில் 15வது தெருவில் ஒரு பழமையான கிணறு உள்ளது. அப்பகுதியை சேர்ந்த ஒருவர் குதிரை பராமரித்து வருகிறார். அவர் தனது குதிரையை அப்பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்.
 
அதை தேடி அவர் வந்த போது கிணற்றுக்குள் எட்டி பார்த்தார். அப்போது கிணற்றின் உள்ளே ஒரு வாலிபர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி தச்சநல்லூர் காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
 
காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை மீட்டனர். பிணமாக கிடந்தவருக்கு சுமார் 20 வயது இருக்கும். அவர் பிரவுன் கலர் சட்டையும், நீல கலர் லுங்கியும் அணிந்திருந்தார். நேற்று இரவு யாரோ மர்ம நபர்கள் அந்த வாலிபரை கடத்தி தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்திருப்பது தெரியவந்தது.
 
தலை துண்டிக்கப்பட்டதால் கிணற்றுக்குள் இருந்து தலை இல்லாத உடல் மட்டும் மீட்கப்பட்டது. இதனால் கொலை செய்யப்பட்டவர் யார் என்பது உடனடியாக தெரியவில்லை. கிணற்றில் சிறிதளவு தண்ணீர் உள்ளது. இதனால் தண்ணீருக்குள் தலை மூழ்கி கிடக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
 
இதையடுத்து கிணற்று நீரை மோட்டார் வைத்து வெளியேற்றி தலையை மீட்க காவல்துறையினர் திட்டமிட்டனர். இதற்காக மோட்டார் கொண்டு வரப்பட்டு நீரை வெளியேற்றும் பணி நடந்தது. இந்த கொலை சம்பவம் தச்சநல்லூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கொலை செய்யப்பட்டவர் யார் என்பது தெரிந்த பின்னரே காவல்துறையினர் அடுத்த கட்ட நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என தெரிகிறது. இந்த சம்பவம் காரணமாக தச்சநல்லூரில் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.