1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Updated : புதன், 14 மே 2014 (13:58 IST)

கருத்து கணிப்புகள் ஜெயலலிதாவுக்கு பயந்து வெளியிடப்பட்டவையாகும் - மு.க.ஸ்டாலின்

நாடாளுமன்ற தேர்தல் கருத்து கணிப்புகள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பயந்து வெளியிடப்பட்டவைகளாகும். இது கருத்து கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு நேற்று மதியம் சென்றார். விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:- 
 
கேள்வி:- நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டு பதிவுக்கு பின்னர் நடைபெற்ற கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளதே. அது குறித்து உங்கள் கருத்து என்ன? 
 
பதில்:- நாடாளுமன்ற தேர்தல் கருத்து கணிப்புகள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பயந்து வெளியிடப்பட்டவைகளாகும். இது கருத்து கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு. 
 
கேள்வி:- நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? 
 
பதில்:- நீங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும். 
 
கேள்வி:- தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு எப்படி உள்ளது? 
 
பதில்:- இன்று (நேற்று) காலை அதிமுக கவுன்சிலர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இதில் இருந்து தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
 
பின்னர் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மு.க.ஸ்டாலின் புறப்பட்டு சென்றார்.