உமாமகேஸ்வரி கொலை: முக்கிய கொலையாளியின் பரபரப்பு வாக்குமூலம்
பெண் என்ஜினீர் உமாமகேஸ்வரி கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினார்கள். அவரை 6 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார். பெண் என்ஜினீயர் உமாமகேஸ்வரி கற்பழித்து கொலை செய்யப்பட்டு கடந்த 22-ந் தேதி கேளம்பாக்கம் அருகே முட்புதரில் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். சிபிசிஐடி காவல்துறை பல்வேறு தகவல்கள், தடயங்களுக்கு பின்பு மேற்குவங்காளத்தை சேர்ந்த ராம்மண்டல் (வயது 23). உத்தம்மண்டல் (23) ஆகியோரை கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். அவர்களை அடுத்த மாதம் 12-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கவும் 7 நாட்கள் காவல்துறை காவலில் வைத்து விசாரிக்கவும் நீதிபதி அங்காள ஈஸ்வரி உத்தரவிட்டார். இதனையடுத்து இந்த கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான உஜ்ஜன்மண்டல் (19) என்பவனை கொல்கத்தா அருகே காரக்பூர் ரயில் நிலையத்தில் காவல்துறையினர் கைது செய்தனர். நேற்று மாலை செங்கல்பட்டுக்கு அழைத்து வந்தனர். அங்கு ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்-1 நீதிமன்ற நீதிபதி மாஜிஸ்திரேட்டு விடுமுறை என்பதால் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்-2 நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட்டு சிட்டிபாபு முன்னிலையில் ஆஜர்படுத்தினார்கள்.
உங்கள் தந்தையின் பெயர் என்ன?. உங்களது வீட்டு முகவரி என்ன?. நீங்கள் செய்த குற்றம் என்ன என்று தெரியுமா? என்று நீதிபதி கேட்டார். தெரியும் என்று தலையாட்டினார். காவல்துறையினர் உங்களை அடித்தார்களா? என்று கேட்டதற்கு இல்லையென்று கூறினான். அவரை 6 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார். மேலும் குற்றவாளியை அடுத்த மாதம் 13-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கவும் வருகிற 4-ந் தேதி மாலை 4½ மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.