இந்தியாவில் தமிழகம் முதலிடம் பெற உழைக்கிறோம்: கருணாநிதி சுதந்திர தின உரை
சமூக, அறிவியல், பொருளாதார நிலைகளில் தொடர்ந்து முன்னேறி எல்லா வகையிலும் இந்தியாவில் தமிழகமே முதல் மாநிலம் எனும் நிலை உறுதி செய்யப்பட வேண்டும் என்ற விழைவோடு ஒவ்வொரு நொடி நேரத்தையும் எண்ணி எண்ணி செலவிட்டு வருகிறது இந்த அரசு என்று முதலமைச்சர் கருணாநிதி கூறினார். சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியை ஏற்றிவைத்து முதலமைச்சர் கருணாநிதி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:இந்த ஆகஸ்ட் திங்கள் 15ஆம் நாள் ஏறத்தாழ 200 ஆண்டுகள் நமது நாட்டை அடிமைப்படுத்தி ஆண்ட ஆங்கிலேயர்கள் வெளியேறிய நாள். நமது நாட்டை நாமே ஆளும் உரிமை பெற்ற உன்னதமான நாள். தாயின் மணிக்கொடி பாரீர். அதை தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர் என்ற மகாகவி பாரதியார் பாடலை நாம் இன்றும் இதயத்தில் ஒலி அலைகளாக்கி அந்த தேசிய கொடிக்கு வணக்கம் செலுத்திடும் திருநாள்.இந்த நன்னாளில் 18 ஆண்டுகளாக என் நெஞ்சை சுட்டெரித்துக் கொண்டிருந்த கவலைக்கு மாமருந்தாக கர்நாடக தலைநகரான பெங்களூருவில் திறக்கப்படாமல் இருந்த அய்யன் திருவள்ளுவர் சிலையை அருமை சகோதரர் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் சீரிய ஒத்துழைப்பின் பயனாக கடந்த 9ஆம் தேதி நடைபெற்ற மாபெரும் விழாவில் திறந்து வைத்தேன்.அந்த மனநிறைவோடு, திராவிட மொழி குடும்பத்தின் முக்கிய மொழிகளில் ஒன்றாகிய புகழ்மிக்க கவிஞர் சர்வக்ஞர் திருஉருவ சிலையை சென்னையில் கடந்த 13ஆம் தேதி கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா திறந்து வைத்தார்.தமிழகம், கர்நாடகம் ஆகிய இரு மாநில மக்களிடையே நல்லுறவு தழைக்கச் செய்திடும் திருப்பணிகளை நிறைவேற்றிய மனநிறைவோடு இன்று 13-வது முறையாக இந்த கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரையை நிகழ்த்துவதில் நான் உவகை மிக கொள்கிறேன்.நமது நாட்டு சுதந்திரத்தை மீட்டிட உடல் பொருள் ஆவி அனைத்தையும் இழந்த தியாக சுடர்களுக்கு தமிழக மக்கள் சார்பில் எனது வீர வணக்கங்களை உரித்தாக்குகிறேன். கத்தியின்றி ரத்தமின்றி ஆயுதம் ஏந்தாமல் அகிம்சா யுத்தம் நடத்தி வெள்ளை ஏகாதிபத்தியத்தை விரட்டிய அண்ணல் காந்தியடிகள் தமிழ் மண்ணை நேசித்தவர்.14
முறை தமிழகத்துக்கு வந்த காந்தியடிகளுக்கு விடுதலை இயக்கத்துக்கான போர் முறைகளை வகுப்பதில் தமிழகம் ஒரு களமாகவே பயன்பட்டிருக்கிறது என்பதை வரலாறு எடுத்துரைக்கிறது. விடுதலை போர்க்களத்தில் பல தியாக முத்திரைகளை பதித்த தமிழகம் நாடு சுதந்திரம் பெற்றபின் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு திருஉருவ சிலைகள், மணிமண்டபங்கள் போன்ற பல நினைவுச்சின்னங்களையும் ஏராளமாக அமைத்து தியாகிகளை போற்றி வருகிறது.சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு 15.8.97 முதல் வழங்கப்பட்ட ஓய்வூதியம் மாதம் ரூ. 3 ஆயிரத்தை ரூ. 4 ஆயிரம் என்றும், அவர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட குடும்ப ஓய்வூதியம் மாதம் ரூ. 1,500 என்பதை ரூ. 2 ஆயிரம் என 1.5.2007 முதல் இந்த அரசு உயர்த்தி வழங்கி வருகிறது.
இந்த ஆண்டு பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழா என்பதையும், தியாகி கக்கனின் நூற்றாண்டு விழா என்பதையும் மனதிலே கொண்டு சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் மாதம் ரூ. 4 ஆயிரம் என்பதை ரூ. 5 ஆயிரம் என்றும் அவரது வாரிசுகளுக்கு வழங்கப்பட்டு வரும் குடும்ப ஓய்வூதியம் மாதம் ரூ. 2 ஆயிரம் என்பதை மாதம் ரூ. 2,500 என்றும் 1.9.2009 முதல் உயர்த்தி வழங்கிட இந்த அரசு முடிவு செய்துள்ளது.தமிழக அரசியலில் தன்மான உணர்வுகளை மீட்டி எழுச்சியை ஏற்படுத்திய அறிவு ஆசான், இந்த ஆண்டின் நூற்றாண்டு விழா வேந்தர் பேரறிஞர் அண்ணா தொடர்ந்து சுட்டிக் காட்டி வந்த பொறுப்புணர்ச்சியோடு தி.மு.க. அரசு தமிழக மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திட பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.2006-
க்குப் பிறகு இதுவரை புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படாமல் பல்வேறு வரிச்சலுகைகளை வழங்கி இந்தியாவில் எந்த ஒரு மாநிலமும் நிறைவேற்றாத பல புதிய திட்டங்களை நிறைவேற்றி தமிழக மக்களின் அரசியல் சமூக பொருளாதார நிலைகளை இந்த அரசு மேம்படுத்தி வருகிறது.1
ரூபாய்க்கு 1 கிலோ அரிசி வழங்கும் திட்டம், ஏழை பெண்களின் திருமணங்களுக்கு ரூ. 20 ஆயிரம் உதவி வழங்கும் திட்டம், கர்ப்பிணி பெண்கள் ஊட்டச்சத்து பெற ரூ. 6 ஆயிரம் அளிக்கும் திட்டம், 50 வயதை கடந்தும் திருமணமாகாத ஏழை பெண்களுக்கு மாதம் ரூ. 400 வழங்கும் திட்டம் என பல்வேறு திட்டங்களை இந்த அரசு செய்து வருகிறது.இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வழங்கும் திட்டம், எரிவாயு இணைப்புடன் இலவச அடுப்புகள் வழங்கும் திட்டம், 1 லட்சத்து 75 ஆயிரத்து 798 நிலமற்ற ஏழை விவசாய தொழிலாளர்கள்- விவசாயிகள் குடும்பங்களுக்கு 2 லட்சத்து 10 ஆயிரத்து 747 ஏக்கர் இலவச நிலம் வழங்கிய திட்டம், 6 லட்சத்து 73 ஆயிரத்து 486 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கிய திட்டத்தையும் இந்த அரசு நிறைவேற்றியுள்ளது.ரூ. 7 ஆயிரம் கோடி கூட்டுறவுக்கடன் தள்ளுபடி செய்த திட்டம், விவசாயி கடனை முறையாக திருப்பி செலுத்தினால் பயிர்க்கடனுக்கு அறவே வட்டி ரத்து செய்யும் திட்டம், பண்ணை சாரா கடன்களுக்கு வட்டி, அபராத வட்டி தள்ளுபடி செய்யும் திட்டம் உள்பட எண்ணற்ற திட்டங்களை இந்த அரசு நிறைவேற்றி உள்ளது. காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாள் என பிறப்பித்த சட்டம் தமிழ் செம்மொழி என அறிவிக்கப்பட்டு, செம்மொழி தமிழாய்வு மையம் சென்னையில் அமைக்கப்பட்டதுடன் தைத்திங்கள் முதல் நாள் தமிழ் புத்தாண்டு தொடங்கும் நாள் என்ற சட்டத்தையும் இந்த அரசுதான் கொண்டு வந்துள்ளது. அரசு ஊழியர்களுக்கு 4 ஆண்டுகளில் ரூ. 2 லட்சம் வரை மருத்துவ உதவி வழங்கும் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம், 1 கோடி குடும்பங்கள் பயன்பெறும் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டு திட்டம் ஆகியவை நடைமுறைப்படுத்தப்பட்டு தரமான மருத்துவ வசதிகள் கிடைக்க ஆவண செய்யப்பட்டுள்ளது.3
லட்சத்து 44 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசுத் துறைகளில் பணி நியமனங்கள், 2 லட்சத்து 13 ஆயிரத்து 692 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் ரூ. 38 ஆயிரத்து 941 கோடி முதலீட்டில் 32 புதிய தொழிற்சாலைகள் அமைக்கும் திட்டத்தையும் இந்த அரசுதான் கொண்டு வந்துள்ளது.கோட்டூர்புரத்தில் உலக தரத்தில் ரூ. 166 கோடியில் அண்ணா நூற்றாண்டு மாநில நூலகமும், அரசினர் தோட்ட வளாகத்தில் ரூ. 450 கோடி செலவில் புதிய சட்டமன்ற தலைமை செயலகம் கட்டும் பணியும் இந்த ஆட்சியில்தான் நடக்கிறது.ரூ. 100 கோடி செலவில் அடையாறு பூங்கா, சென்னை குடிநீர் பிரச்சனையை தீர்க்க மீஞ்சூரிலும், நெம்மேலியிலும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், ஜப்பான் நாட்டு நிதி உதவியுடன் ரூ. 14 ஆயிரத்து 600 கோடி மதிப்பில் சென்னையில் மெட்ரோ இரயில் திட்டம், சென்னை துறைமுகம்-மதுரவாயல் இடையேயான பறக்கும் சாலை திட்டம், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் ஆகிய திட்டங்கள் விரைவில் பயன் அளிக்கும் வகையில் நிறைவேற்றப்படுகின்றன.இலங்கைப் போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உதவ தமிழக அரசு விடுத்த வேண்டுகோளை ஏற்று தமிழக மக்கள் வழங்கிய ரூ. 52 கோடி நிதி உதவியில் இருந்து இது வரை 4 கட்டங்களில் ரூ. 38 கோடியே 83 லட்சம் மதிப்பிலான அரிசி, பருப்பு, துணி உள்பட பல்வேறு பொருட்கள் தமிழக அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தவிர இலங்கை தமிழ் மக்களின் நிவாரண உதவிக்காக பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்த ரூ. 500 கோடியுடன் தமிழக அரசின் சார்பில் ரூ. 25 கோடி நிதி உதவி அளிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.கலைஞர் காப்பீட்டு திட்டத்தை கடந்த 23ஆம் தேதி சென்னையில் தொடங்கி வைத்த மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் கூறும்போது, ஒவ்வொரு சாமானிய மனிதனின் வீட்டு வாசலுக்கும் சென்றடையத் தக்க வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறியதுடன் மருத்துவ சேவை வழங்குவதில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரியாக திகழ்கிறது என்று பாராட்டி உள்ளார்.இதே போல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனும் நீதித்துறைக்கு தமிழக அரசு அதிக நிதி ஒதுக்கி உள்ளதை பாராட்டி இருக்கிறார். 13-வது நிதி ஆணையத்தின் தலைவர் டாக்டர் விஜய் கேள்கர் பாராட்டும் போது, தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி திண்டுக்கல், சிவகங்கை, கடலூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு தேசிய விருது பெற்றுள்ள தமிழகம் மற்ற மாநிலங்களெல்லாம் பின்பற்றப்பட வேண்டிய முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்கிக் கொண்டிருக்கிறது என்று பாராட்டியுள்ளார். இப்படி பலரது பாராட்டுக்களையும் புகழுரைகளையும் தமிழக அரசு தொடர்ந்து பெற்று வருகிறது.நம்நாடு பெற்றுள்ள சுதந்திரத்தின் பயன்கள் தமிழக மக்களுக்கு குறிப்பாக ஏழைகளுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும், அவர்கள் வாழ்வு மேலும் வளம்பெற வேண்டும், சமூக, அறிவியல், பொருளாதார நிலைகளில் தொடர்ந்து முன்னேறி எல்லா வகையிலும் இந்தியாவில் தமிழகமே முதல் மாநிலம் எனும் நிலை உறுதி செய்யப்பட வேண்டும் என்ற விழைவோடு ஒவ்வொரு நொடி நேரத்தையும் எண்ணி எண்ணி செலவிட்டு வருகிறது இந்த அரசு என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள் என்ற நம்பிக்கையோடு இத்தகைய பணிகள் தொடர இடைவிடாது உழைப்போம் என இத்திருநாளில் சூளுரைத்து தமிழக மக்களுக்கு மீண்டும் சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு முதலமைச்சர் கருணாநிதி பேசினார்.