வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: திங்கள், 5 மே 2014 (11:26 IST)

இளம்பெண் துண்டு துண்டாக வெட்டிக் கொலை: போரூர் ஏரியில் உடல் பாகங்கள்

போரூர் ஏரியில் 8 ஆவது தூண் அருகே நேற்று இரவு துண்டிக்கப்பட்ட பெண்ணின் கை, கால் மிதந்தது. அருகிலேயே சாக்கு மூட்டையில் அப்பெண்ணின் தலையுடன் கூடிய உடல், ஒரு கை கிடந்தது.
 
போரூர் காவல்துறையினர் துண்டு துண்டான உடல்களை மீட்டு பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
கொலையுண்ட பெண்ணிற்கு சுமார் 25 வயது இருக்கும். அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
 
கொலைக் கும்பல் பெண்ணின் உடலை தாம்பரம் – மதுரவாயல் புறவழிச் சாலை மேம்பாலத்தில் இருந்தோ, அல்லது போரூர் – பூந்தமல்லி சாலையில் இருந்தோ வாகனத்தில் இருந்தபடி வீசி தப்பி இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள்.
 
கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 
கொலையுண்ட பெண்ணின் முகம் வடமாநிலத்தவர் தோற்றத்தில் உள்ளது. எனவே அவர் சென்னையில் தங்கி வேலை பார்த்த போது மர்ம நபர்கள் யாரேனும் கடத்திச் சென்று கற்பழித்து வெட்டி கொன்று வீசி இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
 
இது தொடர்பாக போரூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மாயமான வடமாநில பெண்களின் விவரத்தை சேகரித்து வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதனால் கொலை வழக்கின் அடுத்தக்கட்ட நிலைக்கு செல்ல முடியாமல் காவல்துறையினர் உள்ளனர்.
 
காஞ்சீபுரம் – திருவள்ளூர் மாவட்டத்தில் மாயமான பெண்களின் பட்டியலையும் காவல்துறையினர் கேட்டு இருக்கிறார்கள். பக்கத்து மாவட்டத்தை சேர்ந்த பெண்ணை கொன்று இங்கு வீசினார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.