1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Muthukumar
Last Updated : வெள்ளி, 2 மே 2014 (16:26 IST)

இளம் பெண்ணைக் கடத்தி கண், கை, வாயைக்கட்டி புதரில் வீசிய கடத்தல் கும்பல்! தாம்பரத்தில் பரபரப்பு

சென்னை தாம்பரம் இரும்புலியூரில் நேற்று ரூ.10 லட்சம் கேட்டு இளம் பெண் ஒருவரை,  4 பேர் காரில் கடத்திச் சென்று சித்ரவதை செய்துள்ளனர்.
 
ரூ.10 லட்சம் கொடுக்கும் அளவுக்கு வசதி படைத்தவர் அவர் இல்லை என்பது தெரிந்தவுடன் நகைகளைப் பறித்துக் கொண்டு கண்ணையும், கைகளையும் கட்டிப் போட்டு விட்டு ரோட்டோரம் புதரில் வீசிவிட்டு தப்பியோடிவிட்டனர்.
 
இடும்புலியூரைச் சேர்ந்த இந்தப் பெண்ணின் பெயர் சாந்தி, வயது 35, இவரது கணவர் கார் டிரைவர். சாந்தி தி.நகரில் உள்ள அழகு நிலையம் ஒன்றில் வேலைபார்த்துவந்தார்.
 
சாந்தி நேற்று மதியம் இரும்புலியூர் பேருந்து நிறுத்தத்தில் தி.நகர் செல்ல பேருந்துக்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை உரசியபடி கார் ஒன்று வந்து நின்றது. காரில் இருந்த மர்ம நபர்கள் அவரை வாயைப்பொத்தி காருக்குள் அடைத்து கூடுவாஞ்சேரி நோக்கி வண்டியை ஓட்டினர்.

காரில் அவர் போராடினார், இதனால் அவரை அடித்தும் உதைத்தும் சித்ரவதை செய்துள்ளனர் கடத்தல் காரர்கள். காரில் இருந்த 4 பேரில் ஒருவன் கத்தியை பெண்ணின் கழுத்தில் வைத்து அவரது கணவனின் செல்பேசி எண்ணைக் கேட்டு அவருக்கு போன் செய்து 10 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளான்.
 
அதிர்ச்சியடைந்த கணவன் சரவணன், ரூ.10 லட்சம் தன்னிடம் இல்லை என்றும் தான் ஒரு சாதாரண கார் டிரைவர் என்றும் தானும் தன் மனைவியும் மாத சம்பளத்திற்கு வேலைபார்ப்பதாகவும் கூறினார்.
 
இதனையடுத்து ஏமாந்த 4 பேரும் சாந்தியின் செயின், வளையல், தோடு, ரூ.5000 ரொக்கம் மற்றும் செல்போன் ஆகியவற்றைப் பிடுங்கிக் கொண்டு கூடுவாஞ்சேரி அருகே ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் காரில் இருந்தே சாந்தியை கண்கள்,கைகள், வாய் கட்டப்பட்ட நிலையில் தள்ளிவிட்டு தப்பியோடிவிட்டனர். வாயைக் கட்டியதால் அவரால் முனகலை மட்டுமே வெளிப்படுத்த முடிந்துள்ளது.
 
அக்கம்பக்கத்தினர் சாந்தியின் முனகலைக் கேட்டு அவரை மீட்டு கூடுவாஞ்சேரி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
 
புகார் தாம்பரம் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டு 4 பேரையும் போலீஸ் வலை வீசி தேடி வருகிறது. இந்தச் சம்பவம் அங்கு பப்ரப்பை ஏற்படுத்தியது.