வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Updated : திங்கள், 21 ஏப்ரல் 2014 (10:00 IST)

ஆட்டோவில் கடத்தி கழுத்து அறுக்கப்பட்டு உயிர் பிழைத்த பெண்ணின் கண்ணீர் கதை

சென்னையை சேர்ந்த பெண்ணை ஆட்டோவில் கடத்தி கொலை செய்ய முயன்ற கும்பல் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை கண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுதொடர்பாக பெண் உள்பட 4 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
 
மீஞ்சூர் அருகே உள்ள எண்ணூர் துறைமுகம் அருகே முட்புதர்கள் நிறைந்த பகுதியில் ஒரு பெண்ணை 4 பேர் கும்பல் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை கண்டதும் அந்த பெண்ணை விட்டு விட்டு 4 பேரும் ஆட்டோவில் ஏறிச்சென்று விட்டனர்.
 
மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இருந்த பெண்ணை மீட்டு மீஞ்சூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். காவல்துறையினர் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினார்கள்.
 
எனது பெயர் விஜயகுமாரி (வயது 40). சென்னை பெரம்பூரில் வசித்து வருகிறேன். அதே பகுதி ஒட்ரைவாடை தெருவில் வசிக்கும் அல்லா நபியின் மனைவி சரோஜா என்ற பாத்திமா(40) என்பவரிடம் நான் உள்பட பலர் சீட்டு கட்டி வந்தோம். ஆனால் எங்கள் சீட்டு பணம் ரூ.7½ லட்சத்தை தராமல் அவர் மோசடி செய்து விட்டார்.
 
இதுபற்றி பாதிக்கப்பட்ட நான் உள்பட 300 பேர், சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் செய்தோம். அதன்பேரில் காவல்துறையினர் பாத்திமாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்பிறகு அவர் ஜாமீனில் வெளியே வந்து விட்டார்.

கடந்த 17 ஆம் தேதி மதியம் 1 மணியளவில் நான், திரு.வி.க. நகரில் உள்ள மார்க்கெட்டுக்கு காய்கனிகள், மளிகை பொருட்கள் வாங்கச்சென்றேன். அப்போது என்னை வழி மறித்த பாத்திமா, ‘‘என்னிடம் இருந்து பணத்தை எப்படி வாங்குவாய்? என்னை ஒன்றும் செய்ய முடியாது’’ கூறினார். திடீரென என் முகத்தில் கைகுட்டையை கட்டி ஆட்டோவில் ஏற்றினர்.
 
அதில் நான் மயங்கி விட்டேன். விழித்து பார்க்கும் போது செடி, கொடிகள் நிறைந்த பகுதியில் எனது கைகளை 2 பேர் பிடித்துகொள்ள பாத்திமா எனது கழுத்தை அறுத்தார். நான் அதை தடுக்க முயன்ற போது எனது இடது கையில் 2 விரல்கள் துண்டானது. அப்போது ஒருவன் எனது தலை முடியை பிடித்து இழுத்ததால் வலி தாங்க முடியாமல் நான் கதறி துடித்தேன்.
 
அப்போது பாத்திமா என் கழுத்தில் கத்தியால் அறுத்தபோது எண்ணூர் துறைமுக சாலையில் மோட்டார் சைக்கிளில் ஒருவர் வருவதை கண்டதும் பாத்திமா மற்றும் 3 பேரும் ஆட்டோவில் ஏறி தப்பிச்சென்று விட்டனர். மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் என்னை காப்பாற்றி மீஞ்சூர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தார் என்று அவர் காவல்துறையினர் கூறினார்.
 
இதையடுத்து காவல்துறையினர் அவரை பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகுமாரிக்கு 11 தையல்கள் போடப்பட்டு உள்ளது. தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
 
அவரது புகாரின் பேரில் மீஞ்சூர் காவல் துணை ஆய்வாளர் பஞ்சாட்சரம் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கொலை முயற்சி குற்றவாளிகள் 4 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.