1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 9 ஜூன் 2016 (11:58 IST)

பெண் குளிப்பதை படமெடுத்து ஃபேஸ்புக்கில் வெளியிட்டவர் தூக்கில் தொங்கவிட்டு படுகொலை

பெண் குளித்ததை படம் எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்ட கிருமாம்பாக்கத்தைச் சேர்ந்த வாலிபர் கடத்தப்பட்டு உயிருடன் தூக்கில் தொங்கவிட்டு படுகொலை செய்யப்பட்டார்.
 

 
புதுச்சேரியை அடுத்த கிருமாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கவாஸ்கர் (29). இவருடைய தாய் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததை அடுத்து, சென்னை ராயபுரத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி வந்துள்ளார்.
 
கவாஸ்கர், பக்கத்து வீட்டை சேர்ந்த அன்பு குடும்பத்தினருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். ஒருநாள் கவாஸ்கர், அன்புவின் மனைவி நந்தினி குளிக்கும்போது, அதை செல்போனில் படமெடுத்து மிரட்டியுள்ளார். பின்னர், பலமுறை அவரிடம் காண்பித்து பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளார்.
 
பிறகு, நந்தினி தனது குடும்பத்தினரிடம் நடந்த விஷயங்களைத் தெரிவித்துள்ளார். இதையடுத்து அன்பு குடும்பத்தினர், கவாஸ்கரை எச்சரிக்கை செய்துள்ளனர்.
 
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கிருமாம்பாக்கத்தை அடுத்துள்ள பிள்ளையார்குப்பத்தில் உள்ள தனியார் ஓட்டலில் கவாஸ்கர் வேலைக்கு சேர்ந்துள்ளார். ஆனாலும் கவாஸ்கர், நந்தினி பெயரில் ஃபேஸ்புக் பக்கத்தை தொடங்கி, அதில் நந்தினியின் படங்களை ஆபாசமாக உருவமாற்றம் செய்து வெளியிட்டுள்ளார்.
 
நந்தினியின் ஆபாச படத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்து அன்புவின் குடும்பத்தினர் அவரிடம் தெரிவித்தனர். இதில், ஆத்திரமடைந்த அன்பு, கவாஸ்கரை சமாதானம் செய்து அழைத்து வருவதுபோல் காரில் அழைத்து வந்துள்ளனர்.
 
ஆனால், வரும் வழியிலேயே  கவாஸ்கரை தாக்கி, அவருடைய கை, கால்களை கட்டி, கழுத்தில் கயிறால் சுருக்கு போட்டு, உயிருடன் ஒரு மரத்தில் தொங்கவிட்டுச் சென்றுள்ளனர்.
 
அங்கு அழுகிய நிலையில் தூக்கில் தொங்கிய கவாஸ்கர் உடலை, காவல் துறையினர் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும், அன்பு,  கார்த்திக் இருவரையும் கைது செய்துள்ளனர்.