வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 24 டிசம்பர் 2016 (16:26 IST)

செயின் பறிக்கச் சென்று உயிரையும் பறித்த கொள்ளையர்கள்!

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்த செயினை பறிக்கும்போது, அந்த பெண் வாகனத்தில் இருந்து கீழே விழுந்து மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


 

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகேயுள்ள கீழ்வன்னியனூர் கிராமத்தை சேர்ந்த மணிவாசகம் (55), அவரது மனைவி சாந்தி (50). கணவன் - மனைவி இருவரும் வீட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக கடந்த 20ஆம் தேதி இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

இருவரும் சந்தவாசல் அருகே சென்று கொண்டிருந்தபோது அங்கு வேகத்தடை இருந்ததால், மெதுவாகச் சென்றுள்ளனர். இதனை சாதகமாக பயன்படுத்தி, பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென சாந்தி கழுத்தில் அணிந்திருந்த சுமார் 3 பவுன் மதிப்புள்ள நகையை பறித்தனர்.

அப்போது இரு சக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்தது. அதனுடன் கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து விழுந்தனர். இதில் சாந்தியின் பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர், காயமடைந்த சாந்தியை ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் சென்னை அரசு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காவல் துறையினர், இது குறித்து வழக்கு பதிவு செய்து கொள்ளைக் கும்பலை தேடி வருகிறார்.