டாஸ்மாக் கடைக்கு, அம்மா டாஸ்மாக் கடை என்று பெயர் வைக்கலாம்: விஜயகாந்த் கிண்டல்
மது பானங்களை விற்பனை செய்யும் டாஸ்மாக் கடைக்கு, அம்மா டாஸ்மாக் கடை என்று பெயர் வைக்கலாம் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கிண்டலாக கூறியுள்ளார்.
சென்னை நெற்குன்றம் அழகம்மாள் சாலையில் தேமுதிக பொருளாளர் ஏ.ஆர்.இளங்கோவனின் ஆரோக்கிய பேக்கரியை தலைவர் விஜயகாந்த் திறந்து வைத்தார்.
அவருடன் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டார். இதைத் தொடர்ந்து, மேற்கு மாவட்ட தேமுதிக சார்பில் ஏழை, எளியோருக்கு தையல் மிஷின், சலவை பெட்டி, ஹெல்மெட் ஆகியவற்றை விஜயகாந்த் வழங்கினார்.
பின்னர் விஜயகாந்த் பேசுகையில், "காமராஜர் ஏழை எளியோருக்கு அடிப்படை வசதிகள் கிடைக்க அரும்பாடு பட்டவர். ஒரு முதல்வர் எப்படி வாழவேண்டும் என வாழ்ந்தவர். புகழுக்காக ஆசைப்படாதவர்.
ஆனால், இன்றோ எங்கு பார்த்தாலும் அம்மா புராணம். இப்போதுள்ள நிலைமைபற்றி நாம் கூற வேண்டுமானால் தொலைகாட்சி நேர்காணலில் அதிமுக பிரமுகர்கள் பேசும்போது அம்மாவின் அந்த சாதனை, இந்த சாதனை என வர்ணிக்கின்றனர்.
டாஸ்மாக் கடைக்கு, அம்மா டாஸ்மாக் கடை என்று பெயர் வைக்கலாமே" என்று விஜயகாந்த் கூறினார்.