எங்கே தமிழ்? சென்னை பேருந்துகளின் குறிப்பேடு ஆங்கிலத்தில் மாற்றம்: அன்புமணி கேள்வி
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகங்களின் மூலம் இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளின் செயல்பாடுகள் குறித்த குறிப்புகளை பதிவு செய்வதற்கான வண்டி குறிப்பேடு ஆங்கிலத்தில் மாற்றப்பட்டதற்கு பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகங்களின் மூலம் இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளின் செயல்பாடுகள் குறித்த குறிப்புகளை பதிவு செய்வதற்கான வண்டி குறிப்பேடு (Vehicle Log Sheet) இதுவரை தமிழில் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், அதை இப்போது ஆங்கிலத்தில் மாற்றியுள்ளனர். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் 1956ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தின்படி அரசின் ஆவணங்கள், படிவங்கள் அனைத்தும் தமிழில் தான் இருக்க வேண்டும். பேருந்துகளுக்கான படிவங்களை ஆங்கிலத்தில் மாற்றுவது தமிழுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும். தமிழ்நாட்டில் அன்னைத் தமிழுக்கு இடமளிக்க மறுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அதுமட்டுமின்றி, ஓட்டுனர்களும், நடத்துனர்களும் பத்தாம் வகுப்புக் கல்வித் தகுதியில் பணிக்கு சேர்ந்தவர்கள். அவர்களால் ஆங்கிலத்தில் எழுத முடியாது. இவை அனைத்துக்கும் மேலாக எந்த மொழியையும் திணிக்கக் கூடாது. எனவே, பேருந்து குறிப்பேட்டை ஏற்கனவே நடைமுறையில் இருந்தவாறு தமிழுக்கு மாற்ற வேண்டும்.
Edited by Mahendran