செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : ஞாயிறு, 14 ஆகஸ்ட் 2016 (15:13 IST)

’41 வயதிலேயே மரணமா?!’ - கருணாநிதி அதிர்ச்சி

41 வயதிலேயே மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு மறைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் மிகுந்த வருத்தமும் அடைந்தேன் என்று திமுக தலைவர் கருணாநிதி வருத்தம் தெரிவித்துள்ளார்.
 

 
தமிழ் திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான நா.முத்துக்குமார் உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்த சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
சீமானின் வீர நடை திரைப்படத்தில் பாடலாசிரியராக அறிமுகமான நா.முத்துக்குமார் [வயது 41] பத்து ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் 1000க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை இயற்றியுள்ளார். இயக்குநர் பாலு மகேந்திராவிடம் நான்கு வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்துள்ளார்.
 
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ''திரைப்பட பாடல் ஆசிரியர் கவிஞர் நா.முத்துக்குமார் தன்னுடைய 41 வயதிலேயே மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு மறைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் மிகுந்த வருத்தமும் அடைந்தேன்.
 
தமிழ்த் திரை உலகில் தன்னுடைய பாடல்களால் தனி முத்திரை பதித்த கவிஞர் முத்துக்குமார் 'தங்கமீன்கள்' திரைப்படத்தில் ஆனந்த யாழை மீட்டுகிறாள் என்ற பாடலுக்காகவும், 'சைவம்' திரைப்படத்தில் அழகே அழகே என்ற பாடலுக்காகவும் தேசிய விருதுகள் பெற்ற கவிஞர்.
 
என் மீது மிகுந்த பற்றும் பாசமும் கொண்ட தம்பி நா.முத்துக்குமாரின் மறைவினால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்'' என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.