எங்களுக்கு அரசு வேலை கொடுத்தால் லஞ்சம் வாங்காமல் வேலை செய்வோம்.. முதலமைச்சருக்கு இளைஞர் வைத்த கோரிக்கை
தமிழக முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, இளைஞர் ஒருவர் அரசு காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரியும், போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த வலியுறுத்தியும் விடுத்துள்ள கோரிக்கை சமூக வலைத்தளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அந்த இளைஞர் தனது கோரிக்கையில், "தமிழக அரசு உடனடியாக அரசுத்துறைகளில் உள்ள காலி பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். எங்களை போன்ற இளைஞர்கள் அரசு அதிகாரிகளாக பொறுப்பேற்றால், எவ்வித லஞ்சமும் வாங்காமல் உங்கள் ஆட்சியில் மிக சிறப்பாகவும் நேர்மையாகவும் வேலை செய்வோம்" என்று உறுதியளித்துள்ளார்.
மேலும், தற்போதைய முக்கிய சமூக பிரச்சினையான போதைப்பொருள் புழக்கம் குறித்து பேசிய அவர், "இன்று வேலைவாய்ப்பு இல்லாமலும், வழிகாட்டுதல் இல்லாமலும் இளைஞர்கள் பலர் போதையைத் தேடிச் சீரழிந்து போகிறார்கள். தயவுசெய்து அதனை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இளைஞர்களின் எதிர்காலத்தை காப்பாற்ற வேண்டும்" என்று முதலமைச்சருக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வேலைவாய்ப்பின்மை மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தல் ஆகிய இரண்டு முக்கிய பிரச்சினைகளை முன்வைத்து, அரசுக்கு நேர்மறையான ஆதரவையும் அதே நேரத்தில் தேவையையும் வலியுறுத்திய இந்த இளைஞரின் எதார்த்தமான பேச்சு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
Edited by Siva
