செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 2 அக்டோபர் 2025 (15:51 IST)

ஆணையம் கூறினால் விஜய் கைது செய்யப்படுவார்.. டிகேஎஸ் இளங்கோவன் பேட்டி..!

Vijay
கரூர் துயர சம்பவத்தை விசாரித்து வரும் ஆணையம் முடிவெடுத்தால், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கைது செய்யப்படுவார் என்று திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த சம்பவம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், "விஜய் மீது ஏன் வழக்கு பதிவு செய்யப்படவில்லை? அரசுக்கு அச்சமா?" என்று கேள்வி எழுப்பியிருந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் டி.கே.எஸ். இளங்கோவன் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
 
டி.கே.எஸ். இளங்கோவன் பேசுகையில், 41 பேர் உயிரிழந்தது குறித்து விசாரிக்கும் ஆணையம், "விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பரிந்துரைத்தால், அவர் நிச்சயமாக கைது செய்யப்படுவார் என்று கூறினார். மேலும், சம்பவத்தின்போது விஜய்யும் அதே இடத்தில் இருந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தால் மட்டுமே அவர் மீது முதலில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் என்றும் விளக்கினார்.
 
விஜய் பரப்புரைக்காக மட்டுமே வந்தவர் என்றும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீதுதான் முதலில் வழக்கு பதிவு செய்யப்படுவது முறை என்றும் திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறினார். திருமாவளவனின் கேள்விக்கு இதுவே திமுகவின் பதில் என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva