1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : சனி, 26 செப்டம்பர் 2015 (00:44 IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்

தூத்துக்குடி மாவட்டத்தில் செப்டம்பர் 25 ஆம் தேதி முதல் செப்டம்பர் 27 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
 

 
இது குறித்து, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ம.ரவிகுமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:–
 
திருச்செந்தூர் தாலுகா, அம்மன்புரத்தில் அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை நிறுவனர் என்.வெங்கடேச பண்ணையாரின் 12ஆவது ஆண்டு நினைவு தினம் செப்டம்பர் 26 ஆம் தேதி சனிக்கிழமை அன்று கடைபிடிக்கப்படுகிறது.
 
இதில் தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் திரளான பலர் கலந்து கொள்வார்கள். ஆனால், கடந்த ஆண்டுகளில் சில விரும்பத்தகாத சம்பவங்கள் சில நடைபெற்றுள்ளதை கருத்தில் கொண்டு, செப்டம்பர் 25 ஆம் தேதி  வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் செப்டம்பர் 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைவரும் ஊர்வலமாக செல்லவும், 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒன்றாக கூடவும், பொதுக் கூட்டம் நடத்தவும்,  வாடகை வாகனங்கள் மூலம் நினைவுதின நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுகிறது என தெரிவித்துள்ளார். இந்த தடை உத்தரவு திருமணம் மற்றும் இறுதி சடங்கு போன்ற ஊர்வலங்களுக்கு பொருந்தாது.