வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: திங்கள், 28 மார்ச் 2016 (23:18 IST)

சிறுதாவூர் பங்களாவில் கண்டெய்னர்களில் பல ஆயிரம் கோடி பணம்: வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு

சிறுதாவூர் பங்களாவில் கண்டெய்னர்களில் பல ஆயிரம் கோடி பணம்: வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு

சிறுதாவூர் பங்களாவுக்கு கண்டெய்னர் லாரிகள் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் கொண்டு செல்லப்பட்டதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
 

 
இது குறித்து, தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஆகியோருக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஒரு புகார் மனு அனுப்பியுள்ளார். அதில் கூறிள்ளதாவது:-
 
கடந்த 27 ஆம் தேதி இரவு, முதல்வர் ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவிற்கு மிகப்பெரிய கண்டெய்னர் ஒன்று லாரியில் எடுத்துச் செல்லப்பட்டது.
 
இந்தக் கண்டெய்னர் ஏற்றிய லாரி கிராமத்துச் சாலையைக் கடந்து சென்றபொழுது, அப்பகுதியில் வசிக்கக் கூடிய மக்கள் லாரியின் ஓட்டுநரிடம் கண்டெய்னரில் என்ன பொருள் உள்ளது என்று கேட்டனர். அதற்கு அவர்கறள், அதில், நிலக்கரி மற்றும் விறகு ஏற்றிச் செல்கிறோம் என்று பதில் கூறியுள்ளனர்.
 
ஆனால், நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் ரூ. 1000 மற்றும் ரூ. 500 அடங்கிய நோட்டுக் கட்டுகள் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு அந்தக் கண்டெய்னரில் கொண்டு செல்லப்பட்டுள்ளது என தெரிய வருகிறது.
 
மேலும், தார்பாலின் உறையைப் போட்டு மூடிய நிலையில் பத்து லாரிகள் மார்ச் 28 ஆம் தேதி காலை சிறுதாவூர் பங்களாவுக்குள் சென்றுள்ளன. லஞ்ச ஊழலில் சேர்க்கப்பட்ட பல ஆயிரம் கோடி ரூபாய் ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக எனக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் உறுதியாக நம்புகிறேன்.
 
மேலும், உறுதி செய்யப்படாத தகவலின் அடிப்படையில் சிறுதாவூர் பங்களா வளாகத்திற்குள்ளாக மூடி மறைக்கப்பட்ட நிலவறைகள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், அதில் சட்ட விரோதமாக லஞ்ச லாவண்யத்தில் பெற்ற பணம் பதுக்கப்பட்டு, மறைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிய வருகிறது.
 
எனவே, தாங்கள் உறுதியான நடவடிக்கை மூலமாக சிறுதாவூர் பங்களாவில் தீவிர சோதனை மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் தேர்தல் ஆணையத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை மீண்டும் வருவதற்கும், சுதந்திரமாகவும் நேர்மையாகவும் தேர்தல் நடக்கும் என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் ஏற்படுத்துவதற்கும் வழி வகுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.