கல்வித்துறைக்கு வாரி வழங்கிய தவெக அரசு.. ரூ.44,527 கோடி நிதி ஒதுக்கீடு
தவெக அரசின் 2026-27 நிதிநிலை அறிக்கையில் கல்வித்துறைக்கு வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. பள்ளி கல்வித்துறைக்கு மட்டும் மிகப்பெரிய தொகையாக ரூ.44,527 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 5.32 லட்சம் பிளஸ்-1 மாணவர்களுக்கு ஹெல்மெட் மற்றும் தண்ணீர் பாட்டிலுடன் கூடிய உயர்தர இலவச மிதிவண்டிகள் ரூ.277 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படவுள்ளன.
உயர்கல்வி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், இலவச லேப்டாப் வழங்கும் வெற்றி லேப்டாப் திட்டம் ரூ.2,000 கோடி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது.
மேலும், மாணவர்களின் தங்குமிட வசதிக்காக ரூ.3,200 கோடி மதிப்பில் (மாநில பங்கு ரூ.640 கோடி) 1 லட்சம் நவீன படுக்கை வசதிகளுடன் 200 TN-SUDAR ஒருங்கிணைந்த மாணவர் விடுதிகள் கட்டப்படவுள்ளன.
சட்டக்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், மதுரையில் 2027–28 கல்வியாண்டு முதல் 300 மாணவர் சேர்க்கையுடன் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, 38 மாவட்ட மத்திய நூலகங்களை ரூ.10 கோடியில் டிஜிட்டல் நூலகங்களாக மாற்றுதல், பள்ளிகளில் போதைப்பொருள் விழிப்புணர்வுக்காக ரூ.7 கோடி ஒதுக்கீட்டில் 'Anti-Drug Clubs' மற்றும் 10581 உதவி எண் உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு அதிரடித் திட்டங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
Edited by Siva
