டெல்லியில் நாளை சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜர்.. டெல்லி போலீசாரிடம் தவெக மனு...
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நாளை டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்காக ஆஜராக உள்ளார்.
கடந்த செப்டம்பர் 27, 2025 அன்று கரூரில் தவெக நடத்திய அரசியல் பொதுக்கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சோகமான சம்பவம் குறித்து உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
ஏற்கனவே தவெக முக்கிய நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தற்போது விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
நாளை காலை தொடங்கும் இந்த விசாரணை சுமார் 2 மணி நேரம் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியில் விஜய்யின் வருகையையொட்டி அவரது ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள் அதிகளவில் திரள வாய்ப்புள்ளதால், அசம்பாவிதங்களை தவிர்க்க உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி தவெக சார்பில் டெல்லி போலீசாரிடம் அதிகாரப்பூர்வமாக மனு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், விஜய்யின் இந்த டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva