காதலிக்கக் கூடாது என கண்டித்த கல்லூரி முதல்வர்.. தற்கொலை செய்த மாணவி.. பெரும் பரபரப்பு..!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பயின்று வந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவி ஒரு இளைஞரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் கல்லூரி நிர்வாகத்திற்கு தெரியவரவே, கல்லூரி முதல்வர் அந்த மாணவியை நேரில் அழைத்து கடுமையாக கண்டித்துள்ளார்.
அத்துடன் நில்லாமல், மாணவியின் பெற்றோரை கல்லூரிக்கு வரவழைத்து, அவர்கள் முன்னிலையிலேயே காதல் விவகாரத்தை பகிரங்கப்படுத்தி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மனமுடைந்து, அவமானத்திற்குள்ளான அந்த மாணவி, தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், தற்கொலைக்கு தூண்டியதாக கல்லூரி முதல்வர் மற்றும் அவருக்கு துணையாக இருந்த அலுவலக உதவியாளர் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Edited by Siva
