'டெட்' தேர்ச்சி இனி அவசியமில்லையா? தமிழக அரசின் புதிய அரசிதழ் சொல்வது என்ன?
ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித்தேர்வு அவசியமில்லை என்று சமூக ஊடகங்களில் பரவிய செய்தி முற்றிலும் தவறானது என தமிழக அரசின் புதிய அரசிதழ் மூலம் தெளிவாகியுள்ளது.
தமிழ்நாடு பள்ளிக்கல்வி மற்றும் தொடக்க கல்வித்துறை ஆசிரியர்களுக்கான பணி விதிமுறைகள் தொடர்பான அரசிதழை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
கடந்த 2025 செப்டம்பரில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, ஆசிரியராக பணிபுரியவும் பதவி உயர்வு பெறவும் 'டெட்' தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. எனினும், ஆசிரியர்களின் நலன் கருதி இத்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான அவகாசம் 2028 அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பணி ஓய்வு பெற இன்னும் 5 ஆண்டுகள் மட்டுமே உள்ள மூத்த ஆசிரியர்களுக்கு இந்த தேர்விலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிகளின்படி, இடைநிலை ஆசிரியரிலிருந்து தொடக்க பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற டெட் தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர்களுக்கும் 'நேரடி நியமனத்திற்கு மட்டுமே டெட்' என்றிருந்த நிலை மாற்றப்பட்டு, இனி பதவி உயர்வுக்கும் டெட் கட்டாயம் என பொது விதியாக மாற்றப்பட்டுள்ளது. நடுநிலை பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு ஏற்கனவே இருந்த டெட் கட்டாயம் என்ற விதி தற்போதும் தொடர்கிறது. எனவே, தகுதி வாய்ந்த ஆசிரியர்களுக்கு மட்டுமே இனி பதவி உயர்வு கிடைக்கும்.
Edited by siva
