செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வெள்ளி, 21 ஆகஸ்ட் 2015 (17:52 IST)

ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 29 வரை தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்: சபாநாயகர் தனபால்

ஆகஸ்ட் 24 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 29 ஆம் தேதி வரை தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என்று சபாநாயகர் தனபால் கூறியுள்ளார்.
 

 
மானியக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக தமிழக சட்டப்பேரவை வரும் 24 ஆம் தேதி கூடும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று காலை சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சட்டப்பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது போன்ற அலுவல்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
 
பின்னர் இதுகுறித்து சபாநாயகர் தனபால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ''ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 29 வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.
 
முதல் நாளன்று முன்னள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியன் ஆகியோர் மறைவுக்கு முதல் நாள் கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்படும். இரங்கல் தெரிவிக்கப்படும் நாளையும் சேர்த்து மொத்தம் 19 நாட்கள் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. அனைத்து நாட்களிலும் கேள்வி நேரம் செயல்படும்'' என்றார்.
 
கடந்த பிப்ரவரியில் சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது நடந்த அமளி காரணமாக, எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் தவிர தேமுதிக எம்எல்ஏக்கள் அனைவரும் இந்தக் கூட்டத் தொடர் முழுவதும் நீக்கப்படுவதாக பேரவைத் தலைவர் அறிவித்தார். இதனால், இந்தக் கூட்டத்திலும் அவர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில், தேமுதிக உறுப்பினர்களை இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. அதேபோல், முக்கிய மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் 2 நாட்களுக்கு நடைபெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
தமிழகம் முழுவதும் மதுவிலக்கு கோரி போராட்டங்கள் நடந்தது குறித்து பேரவையில் பேச திமுக உள்ளிட்ட கட்சிகள் முடிவு செய்துள்ளன. மேலும், குடிநீர் தட்டுப்பாடு, சூரியஒளி மின் கொள்முதல், மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட பிரச்சனைகளும் எழுப்பப்படும் என தெரிகிறது.