1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By bala
Last Modified: செவ்வாய், 12 ஜூலை 2016 (11:55 IST)

கொடூரமாக கணவன், மனைவி மற்றும் மகனை தாக்கிய போலீஸார்- வீடியோ

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை சேர்ந்த ஆட்டொ ஓட்டுனர் ராஜா, தனது மனைவி மற்றும் மகனுடன்  நேற்று செங்கம் பஜார் தெருவுக்கு வந்தார். அப்போது கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அவர்களுக்குள் சண்டையானது. இதை கவனித்த போலீஸ்காரர்கள் மூவர் அவர்களை விசாரித்துள்ளனர். அப்போது இது எங்கள் குடும்ப விஷயம் நீங்கள் தலையிட வேண்டாம் என்று அவர்கள் கூறியுள்ளனர். இதில் போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
 
இதில் ஆத்திரம் அடைந்த அந்த மூன்று போலீசாரும், கணவன், மனைவி மற்றும் மகனை ஆத்திரம் தீர லத்தியால் அடித்து துவைத்தனர். இதில் அவர்கள்  மூவரும் பலத்த காயம் அடைந்தனர். அருகிலிருந்த பொதுமக்கள் போலீஸாரிடம், அவர்கள் தவறு செய்தால் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துங்கள் அதைவிட்டு நீங்கள் ஏன் இவ்வாறு காட்டுமிராட்டித்தனமாக தாக்குகிறீர்கள் என கூறினர். இதில் மேலும் ஆத்திரமடைந்த போலீஸார் பொதுமக்களையும் தாக்க தொடங்கினர்.

இந்த சம்பவம் தனியார் தொலைக்காட்சிகளில் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைக் கண்ட பலரும் போலீசாரின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஒரு பக்கம்,  ராஜாவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் செங்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். விசாரிக்க சென்ற இடத்தில் லத்தியால் அடித்து காயப்படுத்திய காவலர்களை பணிநீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதுபற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர். ஆனாலும், சமாதானம் அடையாத பொதுமக்கள் திருவண்ணாமலை-பெங்களூர் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் செங்கத்தில்பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட அந்த மூன்று போலீசாரையும், ஆயுதப்படைக்கு மற்றம் செய்து டிஐஜி உத்தரவிட்டுள்ளார். கணவன், மனைவியை போலீஸார் தாக்கிய அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...