வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : புதன், 6 மே 2015 (13:40 IST)

பெப்சி குடித்த சிறுமி இறப்பு: விசாரணை நடத்த த.வெள்ளையன் கோரிக்கை

பெப்சி குளிர்பானம் குடித்து இறந்ததாகக் கூறப்படும், நெய்வேலியைச் சேர்ந்த சிறுமி அபிராமி பற்றி விசாரணை நடத்த வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவையின் மாநிலத் தலைவர் த.வெள்ளையன் கோரிக்கை விடுத்துள்ளார்.


 

 
மே 5 ஆம் தேதி அன்று, தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவையின் சார்பில் 32 ஆவது வணிகர் தின மாநில மாநாடு தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகில் நம்மாழ்வார் நினைவுப் பந்தலில் நடைபெற்றது. 
 
தேசியக் கொடி மற்றும் வணிகர் சங்க கொடிகளை மாநிலத் தலைவர் த.வெள்ளையன் ஏற்றிவைத்து மாநாட்டை தொடங்கி வைத்தார். 
 
இந்த மாநாட்டில் அகில இந்திய வர்த்தக சங்கத் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சியாம்பிஹாரி மிஸ்ரா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். 
 
இந்த மாநாட்டில், நெய்வேலியைச் சேர்ந்த 8 வயது சிறுமி அபிராமி பெப்சி குடித்து இறந்து போனது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், கோக் - பெப்சிக்கு தமிழகத்தில் தடைவிதிக்க வேண்டும் என்றும், இணையதள வர்த்தகத்தில் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்பன போன்ற 21 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
மேலும், உள்நாட்டு வணிகத்தைப் பாதுகாக்க உலக வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா வெளியேறக் கோரி, ஜூலை மாதம் கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு பேரணியும், சுதந்திர தினமான, ஆகஸ்ட் 15 ஆம் தேதி அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு தூதரகங்கள் முன்பு உலக  வர்த்தக நகல் எரிப்பு போராட்டம் நடத்த உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.