வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 7 ஆகஸ்ட் 2015 (12:16 IST)

மதுவிலக்கு கோரி பொதுமக்கள் நடத்தும் போராட்டங்களை நான் ஆதரிக்கிறேன் - ராமதாஸ்

மதுவிலக்கு கோரி இதய சுத்தியுடன் பொதுமக்கள் நடத்தும் போராட்டங்களை நான் ஆதரிக்கிறேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 
இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக எதையும் செய்யக்கூடியவர் கருணாநிதி. விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவிருக்கிறது என்பதால் தான், இதுவரை 5 முறை அளித்து நிறைவேற்றப்படாத மது விலக்கு வாக்குறுதியை மீண்டும் ஒருமுறை அளித்திருக்கிறார்.
 
கருணாநிதி கூற்றுப்படியே பார்த்தாலும் 1981 ஆம் ஆண்டில் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்ட பிறகு 35 ஆண்டுகளாக தமிழகத்தை மது அரக்கன் ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் நிலையில், அதற்கு எதிராக இதுவரை ஒரே ஒரு போராட்டமாவது நடத்தியதுண்டா? ஆனால், நான் அப்படியல்ல.
 
கடந்த 35 ஆண்டுகளாக மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்துவதே எனது வாழ்க்கை முறையாக மாறியிருக்கிறது. உதாரணத்திற்காக ஒரு சில போராட்டங்களை மட்டும் பொதுமக்கள் பார்வைக்கு பட்டியலிடுகிறேன்.
 
பாமக தொடங்கப்படுவதற்கு முன்பே 1984 ஆம் ஆண்டில் மதுவுக்கு எதிராக மக்களைத் திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினேன். 1989 ஆம் ஆண்டில் பாமக தொடங்கப்பட்டதும் நிறைவேற்றப்பட்ட 2 ஆவது தீர்மானமே தமிழகத்தில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பது தான்.
 
2004 ஆம் ஆண்டில் தமிழகம் முழுவதும் முழு மதுவிலக்கு கோரி பாமக மகளிர் அணி சார்பில் மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம். தைலாபுரம் அருகிலுள்ள மதுக்கடைக்கு பூட்டுப் போட முயன்றபோது நானும் கைது ஆனேன். இந்த போராட்டத்தின்போது 15 ஆயிரம் பெண்கள் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் வரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
 
2-3-2007 அன்று மதுக்கடைகளில் குடிப்பகங்கள் திறப்பதை கண்டித்து எனது தலைமையில் தமிழகம் முழுவதும் போராட்டம். 23-11-2008 அன்று சென்னையில் மது ஒழிப்பு கலந்தாய்வுக் கூட்டம். 27-06-2009 சென்னையில் மகளிர் சங்கம் சார்பில் மது ஒழிப்பு பேரணி.
 
4-5-2011 மது விளம்பரத்தில் நடித்த கிரிக்கெட் வீரர் தோனியை கண்டித்து சென்னையில் அவர் தங்கியிருந்த விடுதியை முற்றுகையிட்டு பசுமைத் தாயகம் சார்பில் போராட்டம்.
 
26-2-2013 மதுவிலக்கை வலியுறுத்தி தர்மபுரியில் பாமக மகளிர் அணி ஆர்ப்பாட்டம். 1-1-2014 ஆரணியில் தொடங்கி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் பாமக மகளிர் அணி சார்பில் மது விலக்குக்கு எதிரான மகளிர் எழுச்சி மாநாடு நடத்தப்பட்டது.
 
இவை தவிர பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட அனைத்துப் போராட்டங்களிலும் நான் கலந்து கொண்டிருக்கிறேன். வழக்கறிஞர்கள் சமூக நீதிப்பேரவை மூலம் சட்டப்போராட்டம் நடத்தி தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்த 604 மதுக்கடைகளை அகற்ற வைத்திருக்கிறோம்.
 
உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கின் முடிவில் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 1,500 மதுக்கடைகள் மூடப்படும் என்று நம்புகிறேன். மதுவிலக்கு போராட்டத்தை நான் அரசியலாக கருதவில்லை. மாறாக சமூகக் கடமையாகவே கருதுகிறேன்.
 
தேர்தலுக்காகவோ, வாக்குகளை வாங்குவதற்காகவோ இந்த போராட்டங்களை நான் நடத்தவில்லை. அதேபோல், நான் ஏற்கனவே கூறியதைப் போலவே மது விலக்கில் திமுக வுக்கு அக்கறை இருந்தால், அதன் மீதான அக்கட்சியின் உறுதிப்பாட்டை மது ஆலைகளை மூடிகாட்ட வேண்டும். அதைவிடுத்து வார்த்தை சிலம்பம் ஆடுவதில் எந்த பயனும் இல்லை.
 
மற்றபடி மதுவிலக்கு கோரி இதய சுத்தியுடன் பொதுமக்கள் நடத்தும் போராட்டங்களை நான் ஆதரிக்கிறேன். அதேநேரத்தில் மாணவர்கள் தங்களின் கல்வி மற்றும் எதிர்காலத்தை பாதிக்காத வகையில் செயல்படும்படி கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் கடைசி சொட்டு மது ஒழிக்கப்படும்வரை நான் தொடர்ந்து போராடுவேன். இவ்வாறு அந்த அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.