வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 2 ஏப்ரல் 2020 (12:30 IST)

கொரோனா அபாயத்தில் தமிழகம்! – புதிய உத்தரவுகள் அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாகியுள்ளதால் கொரோனா தொற்று பரவும் அபாயமுள்ளப் பகுதியாக தமிழகம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக 19 மாவட்டங்களில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று பரவும் அபாயமுள்ளப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மேற்கொண்டு சில நடைமுறைகளை பின்பற்ற அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அரசு மற்றும் தனியார் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், அலுவலகங்கள், பள்ளிகள், தொழிற்சாலைகள் என மக்கள் நடமாட்டம் உள்ள அனைத்து பகுதிகளிலும் கைக்கழுவ தண்ணீர் குழாய்கள் மற்றும் சோப்பு திரவ கரைசல் வைக்கப்பட வேண்டும்.

அலுவலகங்கள், வீடுகளிலிருந்து வெளியேறும்போதும், உள்ளே வரும்போது கைகளை சோப்பு அல்லது கிருமிநாசினி கொண்டு நன்றாக கழுவ வேண்டும்.

மருத்துவமனைகள், மருத்துவர்கள் மற்றும் ஆய்வகங்கள் தொடர்ந்து 24 மணி நேரமும் கொரோனா குறித்த அறிக்கையை எழுத்துப்பூர்வமாக சுகாதாரத்துறைக்கு அளிக்க வேண்டும். தவறும் ஆய்வகங்கள், மருத்துவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் அனைத்திலும் அடிக்கடி கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும். தவறும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்த உத்தரவுகள் தமிழக பொது சுகாதார சட்டம் 1939 மற்றும் கொள்ளை நோய் சட்டம் 1897ன் படி பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.