அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் முறை: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!
தமிழக அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஒரு மிகப் பெரிய மகிழ்ச்சியான செய்தி! நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த ஈட்டிய விடுப்பு சரண் திட்டம், வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தமிழக அரசு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது, நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததை விட முன்னதாகவே அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், இந்த ஈட்டிய விடுப்பு சரண் திட்டம் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இதனை விரைந்து நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
கரோனா பெருந்தொற்று காலத்தில், அரசின் நிதிநிலையில் ஏற்பட்ட பெரும் சுமையின் காரணமாக, அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது, இந்தத் திட்டத்தின் மூலம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது ஈட்டிய விடுப்பு நாட்களில் 15 நாட்கள் வரை சரண் செய்து, அதற்கான பண பலனை பெற்றுக்கொள்ளலாம். இதன் வாயிலாக, சுமார் 8 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நேரடியாகப் பயனடைவார்கள். இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, தமிழக அரசு ஆண்டுக்கு கூடுதலாக ரூ. 3,561 கோடி நிதியை ஒதுக்கீடு செய்யவுள்ளது.
ஆக, அக்டோபர் 1 ஆம் தேதி முதல் ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறை அமலுக்கு வரவிருக்கிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு, அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Edited by Mahendran