வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: திங்கள், 13 அக்டோபர் 2014 (21:09 IST)

பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 20 சதவீத தீபாவளி போனஸ் அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சுமார் 3 லட்சம் தொழிலாளர்களுக்கு 221 கோடியே 75 லட்சம் ரூபாய் போனஸ் ஆக வழங்கப்படுகிறது.
 
இது குறித்து தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
தமிழ்நாடு அரசு, கடந்த ஆண்டுகளில் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கியதுபோல் 2013-2014 ஆம் ஆண்டிற்கும் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்குவது என முடிவு செய்துள்ளது. இதன்படி,
 
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், அரசு ரப்பர் கார்ப்பரேஷன், தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு மற்றும் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள் / இணையம், கூட்டுறவு மற்றும் பொதுத் துறை சர்க்கரை ஆலைகள் ஆகியவற்றில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.
 
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகையுடன் கூடுதலாக 10 விழுக்காடு கருணைத்தொகை தற்போது வழங்கப்படும்.
 
ஒதுக்கக்கூடிய உபரி தொகையுடன் லாபம் ஈட்டியுள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காடு வழங்கப்படும். போனஸ் சட்டத்தின் கீழ் வராத தலைமை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 1,500 ரூபாயும், கூட்டுறவு தொடக்க சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 1,200 ரூபாயும் கருணைத் தொகை வழங்கப்படும். ஒதுக்கக்கூடிய உபரி தொகையுடன் லாபம் ஈட்டாத கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் அனைத்து தகுதியுடைய பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகை என 10 விழுக்காடு வழங்கப்படும்.
 
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகை என 10 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.
 
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.
 
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு 2,000 ரூபாயும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் தற்காலிகத் தொழிலாளர்களுக்கு 1,500 ரூபாயும் வழங்கப்படும்.
 
தமிழ் நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு 20 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.
 
தமிழ் நாடு பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு 20 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.
 
மொத்தத்தில், தமிழ்நாடு அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் சுமார் 3 லட்சம் தொழிலாளர்களுக்கு 221 கோடியே 75 லட்சம் ரூபாய் போனஸ் ஆக வழங்கப்படும்.
 
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.