வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : சனி, 18 அக்டோபர் 2014 (13:22 IST)

ஜெயலலிதாவை வரவேற்க, சிறை வளாகத்தில் காத்திருக்கும் ஓ.பன்னீர்செல்வம்

சிறையில் இருந்து வெளிவரும் ஜெயலலிதாவை வரவேற்க, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் காத்திருக்கின்றனர்.
 
ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து தீர்ப்பு நகல் பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹாவிடம் இன்று சமர்பிக்கப்பட்டது.
 
அப்போது, ஜெயலலிதாவுக்கு ஜாமீனுக்கான உத்தரவாதம் ரூ.2 கோடிக்கான பிணை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஜெயலலிதாவை ஜாமீனில் விடுவிக்க நீதிபதி குன்ஹா உத்தரவிட்டார்.
 
இதையடுத்து, நீதிபதியின் உத்தரவு நகலை பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை அதிகாரிகளிடம் கொடுக்க வழக்கறிஞர்கள் விரைந்தனர்.
 
இந்நிலையில், ஜெயலலிதாவை வரவேற்க தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பரப்பன அக்ரஹாரா சிறையில் காத்திருக்கின்றனர்.
 
பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதால் அ.தி.மு.க.வினரை உள்ளே விட காவல்துறையினர் அனுமதி மறுத்துவிட்டனர். நூற்றுக்கணக்கானோர் குவிந்துள்ளதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 
இதனிடையே, ஜெயலலிதா பிற்பகலில் சிறையில் இருந்து விடுவிக்கப்படலாம் என்று தெரிகிறது. விமானம் மூலம் சென்னை வரும் ஜெயலலிதாவை வரவேற்க அ.தி.மு.க.வினர் மீனம்பாக்கத்தில் இருந்து போயஸ் கார்டன் வரை சாலையின் இரு பக்கமும் காத்திருக்கின்றனர்.