இன்சூரன்ஸ் இல்லாவிட்டால் பெட்ரோல், டீசல் கிடையாதா? சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு..
செல்லுபடியாகும் மூன்றாம் தரப்பு காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் வழங்கக்கூடாது என்ற முன்னோடி திட்டத்தை உருவாக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் பிரஷாந்த் குமார் மிஸ்ரா அடங்கிய அமர்வு இந்த முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. நாட்டில் இயங்கும் மொத்த வாகனங்களில் சுமார் 56 சதவீத வாகனங்கள் எவ்வித காப்பீடும் இன்றி இயங்கி வருவதாக உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. மோட்டார் வாகன சட்டத்தின்படி காப்பீடு கட்டாயமாக்கப்பட்டு எட்டு ஆண்டுகள் ஆகியும், இந்த நிலை நீடிப்பதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு வாரியம் மற்றும் சாலை போக்குவரத்து அமைச்சகம் இணைந்து 'வாகன்' போர்ட்டல் மற்றும் ANPR கேமராக்கள் மூலம் காப்பீடு நிலையை சரிபார்க்கும் அமைப்பை உருவாக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காப்பீடு இல்லாவிட்டால் எரிபொருள் மறுக்கப்படும் என்ற இந்த திட்டம், வாகன உரிமையாளர்களை உடனடியாக காப்பீடு செய்ய வைக்கும். மேலும், புதிய கார்களுக்கான காப்பீட்டு காலத்தை 4 ஆண்டுகளாகவும், இருசக்கர வாகனங்களுக்கு 6 ஆண்டுகளாகவும் உயர்த்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Edited by Siva
