செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 13 மே 2021 (21:19 IST)

மதுரை இளைஞர்களுக்கு பாராட்டு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!

மதுரையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் அவருடைய நண்பரும் தங்களுடைய ஆட்டோவை கொரோனா காலத்தில் இலவச சேவை வாகனமாக பயன்படுத்தி வருவதை அறிந்த தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இருவருக்கும் வாழ்த்துக் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
 
மதுரை அனுப்பானடியில்‌ ஆட்டோ ஓட்டுநராக உள்ள தங்களின்‌ தொடர்ச்சியான மக்கள்‌ சேவை பாராட்டுக்குரியது. 
 
கொரோனா முதல்‌ அலையின்‌ போதும்‌, தற்போது மிகக்‌ கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வரும்‌ இரண்டாவது அலையிலும்‌ தங்களின்‌ ஆட்டோ மூலம்‌ நோய்த்‌ தொற்றால்‌ பாதிக்கப்பட்டவர்களையும்‌ - பிற நோயாளிகளையும்‌ மருத்துவமனைக்கு கட்டணம்‌ ஏதுமின்றி அழைத்துச்‌ சென்று உயிர்‌ காக்கும்‌ உன்னதமானப்‌ பணியைத்‌ தொடர்ந்து மேற்கொண்டு வருவதை அறிந்து மகிழ்கிறேன்‌.
 
ஊரடங்கு நடைமுறையில்‌ உள்ள நிலையில்‌, மாவட்ட நிர்வாகத்திடம்‌ உரிய அனுமதி பெற்று, நோயாளிகளையும்‌, ரயில்‌ பயணிகளையும்‌ இலவசமாக அழைத்துச்‌ செல்லும்‌ தன்னார்வலராகத்‌ தாங்கள்‌ மேற்கொண்டுள்ள பணி போற்றுதலுக்குரியது. தங்கள்‌ பணியால்‌ ஈர்க்கப்பட்டு இப்பணியில்‌ ஈடுபட்டுள்ள தங்கள்‌ நண்பர்‌ அன்புநாதன்‌ அவர்களும்‌ பாராட்டுக்குரியவர்‌.
 
பேரிடர்‌ காலம்‌ எனும்‌ போர்க்களத்தில்‌ தமிழக அரசு மேற்கொண்டுள்ள போர்க்கால நடவடிக்கைகளுக்குத்‌ துணை நிற்கும்‌ வகையில்‌ தாங்கள்‌ மேற்கொண்டுள்ள சேவையை அரசின்‌ சார்பில்‌ பாராட்டுகிறேன்‌.
 
தாங்களும்‌ குடும்பத்தினரும்‌ நோய்த்‌ தொற்றுக்கால பாதுகாப்பு நடைமுறைகளைக்‌ கடைப்பிடித்து நலமுடன்‌ வாழ வாழ்த்துகிறேன்‌.
 
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.