இலங்கை ராணுவத்திற்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கக் கூடாது: ஜி.கே.வாசன்
இலங்கை ராணுவத்திற்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கக் கூடாது என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து, சென்னையில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம் செயல்படுத்தப்படமாட்டாது என தமிழக அரசு ஆணையிட்டு இருப்பது தமாகாவுக்கும், விவசாயிகளுக்கும் கிடைத்த வெற்றி.
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களையும், படகுகளையும், உடனே மீட்க தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு, சிங்களர்களுக்கு இணையான உரிமைகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
போர்க்குற்றம் குறித்து சர்வதேச நீதி விசாரணைக்கு, இலங்கை அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதை இந்திய அரசு வலியிறுத்த வேண்டும்.
இலங்கை ராணுவத்துக்கு, இந்தியாவில் பயிற்சி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது, தமிழர்கள் நலனுக்கு எதிரானது. இதை தமிழர்கள் விரும்பமாட்டார்கள். எனவே, இலங்கை ராணுவத்திற்கு இந்தியாவில் பயிற்சி அளிக்க கூடாது என்றார்.