வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 10 ஜூன் 2021 (12:22 IST)

சாராய வேட்டையில் ரூ.8.5 லட்சம் திருடிய எஸ்ஐ சஸ்பெண்ட்!

வேலூரில் 8.5 லட்சம் திருடிய புகார்:  எஸ்ஐ உட்பட 2 காவலர்கள் சஸ்பெண்ட்!
 
வேலூர் மாவட்டம் குரு மலையில் உள்ள நச்சுமேடு கிராமத்தில் முறைகேடாக கள்ள சாராயம் காய்ச்சுவதாக வெளியான புகாரின்பேரில் அரியூர் காவல்நிலையத்தை சேர்ந்த 4 காவலர்கள் அங்கு ரெய்டுக்கு சென்றுள்ளனர்.
 
நச்சுமேடு கிராமத்தை சேர்ந்த இளங்கோ மற்றும் செல்வம் ஆகிய இருவர் கள்ள சாராயம் காய்ச்சுவதாக வெளியான தகவலின் பேரில் போலீஸார் அங்கு சென்றபோது இருவரது வீடும் பூட்டியிருந்துள்ளது. பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற காவலர்கள் அங்குள்ள பீரோவை உடைத்து 8.5 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 15 சவரன் நகைகளை எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர்.
 
இதையறிந்த கிராம மக்கள் அவர்களை வழி மறித்து வாக்குவாதத்தில் ஈடுபடவே எடுத்த பொருட்களை காவலர்கள் திரும்ப கொடுத்துள்ளனர். எனினும் முறைகேடாக காவலர்களே பணம் திருடியது குறித்து நடவடிக்கை தேவை என அரியூர் காவல் நிலையத்தை மக்கள் முற்றுகையிட்ட நிலையில் சம்பந்தபட்ட 4 காவலர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்து. 

அதையடுத்து தற்போது 15 சவரன் நகை மற்றும் 8.5 லட்சம் பணத்தை திருடிய புகாரில் காவல்துறை உதவி ஆய்வாளர் அன்பழகன் உட்பட காவலர்கள் யுவராஜ், இளையராஜா என 2 காவலர்களை பணியிடை நீக்கம் செய்து எஸ்பி செல்வகுமார் உத்தரவிட்டுள்ளார். சாராய வேட்டையில் கும்பலாக திருடிய இந்த மூன்று காவலர்களையும் பிடித்து காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.