சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு.. தவெக அரசு தீர்த்து வைக்குமா?
சென்னை சோழிங்கநல்லூர், ஸ்கூல் ரோடு சவுத் பகுதியில் வசிக்கும் அடித்தட்டு மக்களின் அன்றாடத் தண்ணீர் தட்டுப்பாடு குறித்த விவகாரத்தில் பெரும் மாற்றத்தை நாம் காண முடிகிறது.
இப்பகுதியில் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் மூலம் அமைக்கப்பட்ட பொதுக்குழாய் மற்றும் கை பம்புகள் தற்போதைய சூழலில் போதிய தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகின்றன. இதனால், அன்றாட கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், வேலைக்கு நேரமாவது ஒருபுறமிருக்க, போதிய அளவு தண்ணீர் வராத கை பம்பை நீண்ட நேரம் இயக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். வயதான முதியவர்கள் கூட, தங்களின் தளர்ந்த வயதிலும் காலையிலேயே குடும்பத்திற்காக தண்ணீர் பிடிக்க நீண்ட தூரம் குடங்களை சுமந்து அலைய வேண்டியுள்ளது.
இப்பகுதியில் வசிக்கும் குறைந்த வருவாய் கொண்ட குடும்பங்களுக்கு முறையான, நேரடியான குடிநீர் இணைப்பு இல்லாததால், அவர்கள் ஒவ்வொரு நாளும் தண்ணீருக்காகக் கடுமையான போராட்டத்தைச் சந்தித்து வருகின்றனர். சென்னை குடிநீர் வாரியம் தங்களின் தேவைகளைக் கண்டறிந்து, தங்குதடையின்றி நேரடியாகக் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
Edited by Siva
