வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 21 ஏப்ரல் 2015 (15:50 IST)

தலையை வெட்டி நடுரோட்டில் கையில் எடுத்துக் கொண்டு சென்ற ரவுடி; அலறியடித்துக் கொண்டு ஓடிய பொதுமக்கள்

தனது அண்ணனின் கொலைக்கு பழிக்கு பழியாக, எதிரியின் தலையை வெட்டி கையில் எடுத்துக் கொண்டு வீதியில் சென்றதால் பொதுமக்கள் அலறியடித்து ஓடினர்.
 
கடந்த 2004ஆம் ஆண்டு விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தை சேர்ந்த ரவுடி ஆர்.கே.சிவா என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் ரவுடி பத்தர் செல்வன், அவர்களது கூட்டாளிகள் பிரகாஷ், ரவி ஆகியோர் சம்பந்தப்பட்டு இருந்தனர்.
 
இவர்களை பழிவாங்க ஆர்.கே.சிவாவின் தம்பி அறிவழகன் (30) நீண்ட நாட்களாக திட்டமிட்டு வந்துள்ளார். அதன்படி இன்று அதிகாலை அறிவழகன் தனது கூட்டாளிகளுடன் ரவி மற்றும் பிரகாஷ் ஆகியோரை தேடிச் சென்றுள்ளார். அவர்களை கண்டதும் ரவி அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
 
அங்கிருந்த பிரகாஷை அறிவழகன் அறிவாளால் வெட்டியுள்ளார். இதில் பிரகாஷுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே பிரகாஷ் மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவர் இறந்து விட்டதாக நினைத்த அறிவழகனும் அவரது கூட்டாளிகளும் அங்கிருந்து சென்றுள்ளனர்.
 
பின்னர் இன்னொரு அண்ணன் கொலையில் தொடர்புடைய ரவுடி பத்தர் செல்வனை இவர்கள் தேடிச் சென்றுள்ளார். நண்பர்களுடன் டென்னிஸ் விளையாடிக்கொண்டு இருந்த பத்தர் செல்வனை அறிவழகன் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த பத்தர் செல்வன் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.
 
பின்னர், வெட்டிய பத்தர் செல்வத்தின் தலையை துண்டித்த அறிவழிகன் தலையை ஒரு கையிலும், அறிவாளை மற்றொரு கையிலும் எடுத்துக்கொண்டு விழுப்புரம் – புதுவை சாலையில் நடந்து சென்றுள்ளார்.
 
அறிவழகன் கையில் தலையை வைத்துக்கொண்டு வருவதை பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடியுள்ளனர். பின்னர் அறிவழகன் பிரதான சாலையில் உள்ள காந்தி சிலையின் அருகே தலையை வைத்துள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார்.
 
வெட்டுபட்ட பிரகாஷ் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். பத்தர் செல்வனுக்கு மனைவியும், 2 பெண் குழந்தையும் உள்ளனர். கணவர் கொலை செய்யப்பட்டதை அறிந்ததும் பூங்காவிற்கு ஓடிவந்த மனைவி பத்தர்செல்வன் பிணத்தை பார்த்து கதறி அழுதார்.