1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Updated : வெள்ளி, 19 டிசம்பர் 2014 (13:09 IST)

ஆபாச படத்தில் வருவது போல கற்பழிக்க முயன்றேன்: 6 ஆம் வகுப்பு சிறுமியை கொன்ற மாணவன் வாக்குமூலம்

நண்பர்களுடன் சேர்ந்து லேப் டாப்பில் ஆபாச படம் பார்த்து வந்தேன் என்றும், அந்த படத்தில் உள்ளது போல் உறவு கொள்ளும் எண்ணத்தில் கிருத்திகாவை அழைத்து சென்றேன் என்றும், ஆடையை கழற்ற முயன்றபோது சத்தம் போட்டதால் கழுத்தை நெரித்து கொலை செய்தேன் என்றும் கைதான மாணவர் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். 
 
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பத்தை அடுத்த காங்குப்பம் கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவரது இளைய மகள் கிருத்திகா (11) மாச்சனூர் அரசு உயர் நிலைப்பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 15ஆம் தேதி வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற மாணவி அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடியும் இரவு வரை எந்த வித தகவலும் கிடைக்கவில்லை.
 
மறுநாள் காலையில் காங்குப்பம் அருகே உள்ள மாந்தோப்பில் மாணவியின் உடல் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையிலும், ஆடைகள் அவிழ்ந்த நிலையிலும் பிணமாக கிடந்தார். அவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டது. கே.வி.குப்பம் காவல்துறையினர் செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
 
கொலையாளியை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினர் விசாரணையில் கிருத்திகா படித்த அதே பள்ளியில் படிக்கும் அதே கிராமத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர் காணாமல் போனது தெரியவந்தது. அவரை காவல்துறையினர் தேடி வந்தனர்.

நேற்று அதிகாலை காவல் நிலையத்தில் விசாரணைக்கு வந்த அந்த மாணவனின் தந்தை செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த போனை வாங்கி காவல்துறையினர் எதிர்முனையில் பேசியவரிடம் விசாரித்தனர். அப்போது, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர், 10ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் தன் தந்தையுடன் பேச வேண்டும் எனக்கூறியதால் போன் செய்ததாக கூறினார்.
 
சுதாரித்துக் கொண்ட காவல்துறையினர் அந்த மாணவர் கே.வி.குப்பத்தில் நடந்த மாணவி கொலையில் தேடப்பட்டு வருவதாகவும், அவன் தப்பிவிடாமல் பிடித்து வைத்துக் கொள்ளுமாறும் கூறினர். இதனையடுத்து அந்த ஆட்டோ டிரைவர் மாணவனிடம் எந்த தகவலும் கூறாமல், ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சுற்றியபடி இருந்தார்.
 
அந்த செல்போன் இருக்கும் இடத்தை அறிந்து தனிப்படையினர் ஆட்டோவில் இருந்த மாணவனை பிடித்து கைது செய்து குடியாத்தம் கொண்டுவந்து விசாரித்தனர்.
 
காவல்துறையினரிடம் அந்த மாணவன் கொடுத்த வாக்குமூலத்தில், "நண்பர்களுடன் சேர்ந்து செல்போன் மற்றும் மடிக்கணினியில் ஆபாச படம் பார்த்து வந்தேன். அந்த படத்தில் உள்ளது போல் உறவு கொள்ளும் எண்ணத்தில் கிருத்திகாவை ஏமாற்றி திங்கட்கிழமை மதியம் பள்ளி முடிந்து வலுக்கட்டாயமாக ஒரு தோப்புக்குள் அழைத்து சென்றேன். அங்கு மாணவியை மிரட்டி ஆடைகளை அவிழ்க்க சொல்லி தவறாக நடக்க முயன்றேன். அப்போது அவள் சத்தம் போடவே கழுத்தை நெரித்தேன். இதனால் அவள் மயங்கி கீழே விழுந்தாள்.
 
உடனே மாணவியின் துப்பட்டாவை எடுத்து கழுத்தை இறுக்கினேன், அவள் தலையில் கட்டியிருந்த ரிப்பனை அவிழ்த்து கை, கால்களை கட்டினேன். மேலும் பாட்டிலால் தலையில் அடித்தும், நெஞ்சிலும் கிழித்தேன். இதனால் அவள் இறந்துவிட்டாள். பின்னர் மாணவியின் கொலுசு, சைக்கிளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டேன் " என்று கூறியுள்ளார்.
 
இதனிடையே, கிருத்திகாவின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து சொந்த கிராமத்தில் நேற்று மாலை அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.