செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 27 நவம்பர் 2022 (12:37 IST)

இந்தியாவிலேயே முதல் முறையாக அதிலும் சென்னையில்… என்ன தெரியுமா?

சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான நிரந்தர பாதை அமைக்கப்பட்டுள்ளது.


மெரினாவில் கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான 263 மீட்டர் நீளம் மற்றும் 3 மீட்டர் அகலத்தில் சாய்வுதளம் அமைக்கும் பணி ஜூன் மாதம் தொடங்கியது. இதற்காக ரூ.1.14 கோடி செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

2016 ஆம் ஆண்டு முதல் தற்காலிக சாய்வுப்பாதைகள் நடைமுறையில் உள்ள நிலையில், ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக நிரந்தர கட்டமைப்பைக் கோரி வந்தனர். மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக நிரந்தரக் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான பேச்சு வார்த்தைகள் 1998 முதல் நடைபெற்று வருகின்றன. முதலில் காந்தி சிலைக்கு அருகில் சாய்வுதளம் அமைக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அந்த பகுதியில் மெட்ரோ ரயில் பணியை எளிதாக்கும் வகையில் அது மாற்றப்பட்டது என்று தெரிகிறது.

மழை பெய்தாலும் சேதம் ஏற்படாது என்பதால் முதலில் ஜியோசிந்தடிக் பொருட்களை பயன்படுத்த மாநகராட்சி திட்டமிட்டது. இருப்பினும், மாற்றுத்திறனாளிகளுக்கு மரச் சரிவுகள் எளிதாக இருக்கும் என்று ஆர்வலர்கள் கூறியதால் திட்டம் மாற்றப்பட்டது. கிரேட்டர் சென்னை மாநகராட்சியின் கூற்றுப்படி, இந்த அமைப்பு பாபூல், சிவப்பு மராந்தி மற்றும் பிரேசிலிய மரங்களால் கட்டப்பட்டுள்ளது.

பொதுமக்களின் வசதிக்காக, முதியோர் பிடித்துக் கொள்ள வழி முழுவதும் கைப்பிடிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், மக்கள் தங்கள் வசதிக்கேற்ப வளைவில் நுழைய/வெளியேற அனுமதிக்க ஒவ்வொரு 10 மீட்டருக்கும் திறப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கடலில் இருந்து ஏறக்குறைய 10மீ தொலைவில் காட்சி மையம் உள்ளது.

இந்த முயற்சியானது கடற்கரையின் இயற்கைக் காட்சியை அணுகுவதற்கும், பாதுகாப்பான மற்றும் வசதியான இடத்திலிருந்து காற்றை அனுபவிக்க ஒரு முழு சமூகத்திற்கும் அதிகாரம் அளிக்கிறது என்று சென்னை மாநகராட்சி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது பலரால் வரவேற்கப்பட்டுள்ளது.