செவ்வாய், 19 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 23 டிசம்பர் 2016 (16:44 IST)

ராம் மோகன் ராவ் விரைவில் கைது?

வருமான வரித்துறை அதிகாரிகளின் அதிரடி சோதனையைத் தொடர்ந்து தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


 

 
தமிழக அரசின் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம் மணல் குவாரி ஒப்பந்தங்களை பெற்று கோடிக் கணக்கில் பணத்தை சேர்த்தவர்தான் சேகர் ரெட்டி. அவரிடம் வருமான வரித்துறை மற்றும் சி.பி.ஐ அதிகாரிகள் நடத்திய சோதனையில் அவரிடம் ரூ. 131 கோடி பணம், 177 கிலோ தங்கம் மற்றும் பல முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.
 
அவரிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் அவருக்கும், ராம் மோகன் ராவுக்கும் இடையே தொழில் ரீதியான நட்பு இருந்தது தெரிய வந்தது. பல ஆயிரம் கோடி ஒப்பந்தங்களை சேகர் ரெட்டிக்கு அள்ளிக்கொடுத்துள்ளார் ராம் மோகன் ராவ். 
 
எனவே சென்னை அண்னாநகரில் ராம் மோகன் வசிக்கும் வீடு,  திருவான்மியூரில் உள்ள அவரின் மகன் வீடு, ஆந்திராவில் உள்ள மற்றொரு வீடு, உறவினர்கள் வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரின் அலுவலக அறை ஆகிய இடங்களில் நேற்று முன் தினம் அதிகாலை முதல் இரவு 7.30 மணி வரை அதிகாரிகள் சோதனை செய்தனர். 
 
அதில் பல முக்கிய ஆவணங்களோடு, 5 கோடி மதிப்புள்ள தங்கம், பல கோடி ரூபாய் பணம் சிக்கியது. முக்கியமாக அதில், ரூ.30 லட்சம் புதிய ரூபாய் நோட்டுகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
இதனைத் தொடர்ந்து அவரை தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கிய தமிழக அரசு, கிரிஜா வைத்தியநாதனை புதிய தலைமைச் செயலாளராக நியமித்துள்ளது.
 
இந்நிலையில் ராம் மோகன் ராவ், அவரது மகன் விவேக் மற்றும் விவேக்கின் வழக்கறிஞர் அமலநாதன் ஆகியோரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், அவர்கள் விரைவில் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.