வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: சனி, 19 டிசம்பர் 2015 (00:27 IST)

வெள்ள நிவாரணப் பணிகள் விரைவு பெறவேண்டும்: சீமான் கோரிக்கை

மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில், வெள்ள நிவாரணப் பணிகள் விரைவு பெறவேண்டும் என சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
 

 
இது குறித்து, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
தமிழகத்தின் தலைநகர் சென்னை மற்றும் கடலூர் மாவட்டத்தையும் அழித்துக் கோரத் தாண்டவம் ஆடியுள்ள பெரும் மழை வெள்ளப் பாதிப்பில் இருந்து இன்னமும் மக்கள் மீண்டு வர இயலாத் துயரில் ஆழ்ந்துள்ளார்கள்.
 
உண்டு, உறைவிடம், உடை, பொருட்கள், ஆவணங்கள் என அனைத்து அடையாளங்களை இழந்து மக்கள் நிர்கதியாய் நிற்கிறார்கள்.
 
தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், மாந்தநேயம் கொண்ட தனிநபர்களும், மனிதநேயமிக்கக் கட்சிகளும், தன்னலம் பாராத சிறு சிறு அமைப்புகளும் மக்களின் துயரில் பங்கேற்று அவர்களுக்கு உதவி செய்து ஆறுதலாக இருந்து வந்தாலும் மக்கள் அடைந்துள்ள துயரங்களுக்கு, இழந்த இழப்புகளுக்கு இது போதாது. தமிழக அரசும், மத்திய அரசும் செய்து வருகின்ற நிவாரணப்பணிகள் பெருங்கடலில் கலந்த சில துண்டு பெருங்காயங்களாய் உள்ளது.
 
இயற்கைப் பேரிடரில் சிக்கி சின்னாபின்னமாய்ச் சிதைக்கப்பட்டிருக்கிற மக்களை மீட்க ஒட்டுமொத்த தமிழகமும் ஒருமித்த மனதோடு கரம் கோர்த்து பணியாற்ற வேண்டிய மாபெரும் கடமை தற்போது எழுந்திருக்கிறது.
 
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் கடலூர் பொது மக்களுக்கு உதவும் வகையில், மகளீர் சுய உதவிக் கடன்களையும் விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
 
தமிழக அரசு மக்களின் நிலை உணர்ந்து அரசு ஆவணங்கள் இல்லாவிட்டாலும் கூட அவர்களுக்கு உரிய நிவாரணங்கள், பொது மக்களுக்கு தேவையான அனைத்து  ஆவணங்களை காலதாமதம் இன்றி உருவாக்கித் தரவேண்டியது தமிழக அரசின் தலையாயக் கடமை என்று தெரிவித்துள்ளார்.