வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : புதன், 25 நவம்பர் 2015 (01:32 IST)

தமிழகத்தில் பத்திரிக்கை சுதந்திரம் இல்லை: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

தமிழக அரசு பத்திரிக்கை சுதந்திரத்தை நசுக்கிவருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
தமிழகத்தில் அதிமுக அரசு பதவியேற்றது முதல் பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்படும் நடவடிக்கைகளை அதிமுக அரசு செய்து வருகிறது. ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செய்திகளை வெளியிடாத பத்திரிக்கைகளுக்கு அரசு விளம்பரம் வழங்க மறுப்பது, தொலைகாட்சிகளின் கேபிள் தொடர்ப்புகளை துண்டிப்பது என பல்வேறு யுக்திகள் கையாளப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
 
தமிழக மக்கள் மிகவும் விரும்பி படிக்கும் இதழ் ஆனந்த விகடன் வார இதழில். அந்த இதழில்,  என்ன செய்தார் ஜெயலலிதா என்ற தலைப்பில் கடந்த நாலரை ஆண்டுகால அதிமுக ஆட்சியின் அவலங்கள் பட்டியலிட்டு செய்திக் கட்டுரை வெளியிடப்பட்டுளளது. இதை சகித்து கொள்ள முடியாத ஜெயலலிதா அரசு, ஆனந்த விகடன் வார இதழ் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது.
 
ஆனந்த விகடனில் வெளிவந்த இதே கட்டுரையை விகடன் முகநூலில் வெளியிடப்பட்டிருந்தது.  இந்த அரசியல் கட்டுரையை லட்சகணக்கான மக்கள் விரும்பி படித்திருக்கிறார்கள். இதை சகித்துக்கொள்ள முடியாத ஜெயலலிதா தன்னுடைய அதிகார பலத்தை பயன்படுத்தி விகடன் முகநூலை யாரும் பார்க்க முடியாத அளவிற்டகு முடக்கி உள்ளனர். இதை விட ஜனநாயகப் படுகொலை எதுவும் இருக்கவே முடியாது.
 
இதன் மூலம் ஆனந்த விகடன் இதழை நசுக்கிவிடலாம் என்று ஆட்சியாளர்கள் கனவு காண்கிறார்கள். ஏற்கனவே, ஜெயலலிதா ஆட்சியில் ஆனந்த விகடன் மீது தொடுக்கப்பட்ட 15 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
 
மேலும், தமிழத்தில் பத்திரிக்கை சுதந்திரம் என்ற ஒன்று இல்லவே இல்லை. எனவே, பத்திரிக்கை சுதந்திரத்தை நசுக்கும் ஜெயலலிதா அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.