1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 10 பிப்ரவரி 2015 (16:25 IST)

தனக்குத் தானே பிரசவம் பார்த்த கர்ப்பிணிப் பெண் மரணம்

திருப்பூரில் தனக்குத் தானே பிரசவம் பார்த்த கர்ர்பிணிப் பெண் மரணமடைந்துள்ளார்.
 
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த புதுப்பட்டியை சேர்ந்த பரமேஷ், சுமதி தம்பதியினர். இவர்களுக்கு ஜெயஸ்ரீ (7), ஷர்மிளா (4½) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் வேலைதேடி சில வருடங்களுக்கு முன் திருப்பூர் வந்துள்ளார்கள்.
 
இவர்கள் திருப்பூரில் உள்ள நல்லூர் காஞ்சிநகரில் வாடகைக்கு வீடு எடுத்து வேலைக்கு சென்று வந்துள்ளனர். கடந்த 6 மாதத்துக்கு முன் கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இருவரும் பிரிந்து சென்றுவிட்டனர்.
 
அப்பொழுது சுமதி கர்ப்பமாக இருந்துள்ளார். மேலும் கணவன் பிரிந்து சென்றதால், கர்ப்பிணியான சுமதி வீட்டு வேலைக்கு சென்று 2 பெண் குழந்தைகளையும் காப்பாற்றி வந்துள்ளார்.
 
இந்நிலையில், சுமதிக்கு பிரசவ காலம் நிறைமாதம் நெருங்கியது. ஆனால் மருத்துவமனைக்கு சென்று பிரசவம் பார்க்க சுமதியிடம் பணவசதி இல்லை. மருத்துவமனையில் சேர்ந்து பிரசவம் பார்த்தால் குழந்தைகளை கவனிக்க முடியாது என்பதால் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளார்.
 
இந்நிலையில் நேற்றிரவு சுமதிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. பிரசவ வலியால் சுமதி துடித்துக்கொண்டிருந்தாலும் தூங்கிக்கொண்டு இருந்த குழந்தைகளுக்கு தெரியக்கூடாது என்பதற்காக தனது வலியால் சத்தம் போடாமல் இருந்துள்ளார். 
 
பின்னர் சுமதிக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதில் சுமதிக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் மயங்கி கிடந்துள்ளார். பிறந்த குழந்தையும் குழந்தை இறந்து விட்டது. அப்போது தூங்கிக்கொண்டிருந்தது மற்ற 2 இரண்டு குழந்தைகள் எழுந்து பார்த்துள்ளனர்.
 
தாய் ரத்தவெள்ளத்தில் மயங்கி கிடந்ததை கண்டு சத்தம் போட்டுள்ளனர். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்துள்ளனர். அப்போது சுமதி மூச்சற்று குழந்தையுடன் கிடந்துள்ளார்.
 
அக்கம் பக்கத்தினர் உடனே 108 அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு வந்த அவசர ஊர்தி மருத்துவ ஊழியர்கள் சுமதியை சோதித்து பார்த்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
 
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். சுமதியின் உடலை மீட்ட காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.