1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : திங்கள், 22 ஜூன் 2015 (10:33 IST)

நடத்தையில் சந்தேகப்பட்டு கர்ப்பிணி மனைவியை கத்தியால் குத்திய கணவன்

சென்னை காசிமேட்டில் நடத்தையில் சந்தேகப்பட்டு கர்ப்பிணி மனைவியை கத்தியால் குத்திய கணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
 
சென்னை காசிமேடு ஜி.எம் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சரத்குமார். மீனவரான இவருக்கு வயது 25. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கீர்த்தனா என்ற 19 வயது பெண்ணுக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.
 
இந்நிலையில், கீர்த்தனா 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். சரத்குமார் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
 
அதேபோல் நேற்றுமுன் தினம் இரவு கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த சரத்குமார், கர்ப்பிணி என்று கூட பார்க்காமல் கீர்த்தனாவை வெறித்தனமாக கத்தியால் குத்தினார்.
 
இதில் கீர்த்தனாவின் முகம், கழுத்து, மார்பு ஆகிய பகுதிகளில் கத்திக்குத்து பட்டது. இதில் ரத்த வெள்ளத்தில் கீர்த்தனா மயங்கி விழுந்தார்.
 
உடனே அக்கம்பக்கத்தினர், இது குறித்து காசிமேடு காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து படுகாயம் அடைந்த கீர்த்தனாவை காவல்துறையினர் மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிப்பப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சரத்குமாரை கைது செய்தனர். பின்னர், அவரை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.